ஈரோட்டில் செங்கோட்டையன் பற்றி.. அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பேசிய வார்த்தை.. இப்போது சிக்கல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 75 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறைகளுக்கு இருக்கைகள் வழங்கும் விழாநடந்தது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். அவரை தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்று பேசியதுடன், புகழ்ந்து பேசினாராம்.. இந்த வீடியோ வைரலான நிலையில் தலைமை ஆசிரியர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளி கட்டி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்பியூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்தராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வகுப்பறைகளுக்கு இருக்கைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்று பேசியுள்ளார். அவர் அப்போது பேசுகையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவரை வென்றிட இங்கே யாரும் இல்லை என்று புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் விழாவில் மதம் சார்ந்த பாடல்களை ஒலிபரப்பவிட்டாராம். மேலும் அந்த பாடல்களை மாணவர்களை திரும்ப பாடச்சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த விவகாரம் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ்வின் கவனத்திற்கு நெட்டிசன்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி சுப்பாராவ் தலைமையில் அதிகாரிகள் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரை பவானி அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் உத்தரவிட்டார். இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications