குலுங்கிய ஈரோடு.. தாய்ப்பால் கொடுத்து கொண்டிருக்கும்போதே உயிரிழந்த இளம்பெண்.. "வீல்" என கதறிய குழந்தை
ஈரோடு: தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோதே, இளம்தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கவுந்தப்பாடி சின்னியம்பாளையம்.. இங்கு வசித்து வருபவர் மதன்குமார்.. இவரது மனைவி பெயர் பூரணி.

இளம்தாய் பூரணி : இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... இந்த குழந்தைக்கு, இன்று காலை பூரணி தன்னுடைய வீட்டில் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது..
கணவன் அதிர்ச்சி: இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூரணியின் கணவர் மதன்குமார், பதறி துடித்து, அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடினார்.. பிறகு, உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்கு பூரணியை அழைத்து சென்றிருக்கிறார்.. ஆனால், பூரணியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள், தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தபோதே பூரணிக்கு மயக்கம் வந்துள்ளது..
தாய்ப்பால் கொடுத்தபடியே, மயங்கி சரிந்துள்ளார்.. மதன்குமார் அவரை எழுப்பி பார்த்தபோதும், அசைவில்லை.. மயங்கிய நிலையிலேயேதான், மருத்துவமனைக்கு பூரணியை கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதைக்கேட்டு, மதன்குமாரும், குடும்பத்தினரும் கதறி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது. இதனைத் தொடர்ந்து பூரணியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது..
போஸ்ட்மார்ட்டம்: பூரணிக்கு உடல்நல பாதிப்பு ஏற்கனவே இருந்ததா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று உடனடியாக தெரியவில்லை. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தால்தான், முழு விவரமும் தெரியவரும். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது, இளம்தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications