ஈவிகேஎஸ் இளங்கோவன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
ஈரோடு மாநகராட்சியில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே வார்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார்.
வாக்குக் கேட்டுச்செல்லும் இடங்களிலெல்லாம் மக்களுடைய வரவேற்பு அமோகமாக இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.
திருச்சியில் அண்ணா நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், அப்போது அவர் கூறியதாவது;
இதுலருந்தே தெரியுதே.. “தோல்வி பயம்”.. இடைத்தேர்தல்: பாஜக குற்றச்சாட்டு பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ்!
ரயிலில் ஆலோசனை
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே காலையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர். அதனை வாங்கிக் கொண்டுதான் முதலமைச்சர் வேலூர் பயணம் மேற்கொண்ட போது ரயிலில் இது குறித்து பேசினேன்.
படிப்படியாக நிறைவேற்றுவோம்
குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இது தொடர்பாக நல்ல ஒரு முடிவை முதலமைச்சர் எடுப்பார். நிதிநிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை படிப்படியாக நிறைவேற்றுகின்ற வண்ணம் எங்களது செயல்பாடுகள் இருக்கும்.
வெற்றி வாய்ப்பு
ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சி. ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. மாநகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு வார்டு மட்டுமே அதிமுக கவுன்சிலர் வசம் உள்ளது. அந்த வார்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீயா, நானா?
எங்களுக்கும் அந்த சேலஞ்ச் தேவை. நீயா, நானா? என பார்க்கும் அளவிற்கு நாங்களும் களத்தில் இறங்கியுள்ளோம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செல்லும் இடமெல்லாம் மக்களுடைய வரவேற்பும் சிறப்பாக உள்ளது. குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.