பிறழ்சாட்சி.. 12 ஆண்டுகால கடத்தல் வழக்கு.. விடுதலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை குற்றவாளி யுவராஜ்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு ஹேமலதா - பாலாஜி ஆகியோர் கடத்தப்பட்ட வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக அளித்த சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறினர். இதனால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் மற்றும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி கோகுல்ராஜ் வீட்டிற்கு வராததால், பெற்றோர் தேடி வந்தனர். இந்த சூழலில் நாமக்கல் அருகே உள்ள தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் யுவராஜ்-க்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது 2013ஆம் ஆண்டு கடத்தல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. 2013ஆம் ஆண்டு ஹேமலதா - பாலாஜி ஆகியோர் கடத்தப்பட்ட வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சாட்சி அளிக்க வேண்டியவர்கள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர். பிறழ்சாட்சியாக மாறியதால், இந்த வழக்கில் இருந்து யுவராஜ் உள்ளிட்ட 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருந்தாலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications