மோடியை விமர்சித்தால் உடனே ரெய்டு வரும்.. அதிமுகவிற்கு சட்டாம்பிள்ளை பாஜக தான்.. சிதம்பரம் அட்டாக்
நீங்க யாராவது மோடியை பற்றி ஒரு குறும்படம் தயாரித்து விமர்சித்தால் உங்கள் வீட்டிலும் ரெய்டு செய்வார்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பாஜகவை விமர்சித்துள்ளார்.
ஈரோடு: நீங்க யாராவது மோடியை பற்றி ஒரு குறும்படம் தயாரித்து விமர்சித்தால் உங்கள் வீட்டிலும் ரெய்டு செய்வார்கள். விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத அரசாக நரேந்திர மோடி அரசு உள்ளது. மத்திய அரசு கொள்கை வேறு என்றால் அதிமுக ஏன் அங்கு இருக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதமபரம், ஈவிகேஸ் இளங்கோவன் நிச்சயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவார் என்றார்.

சகித்துக்கொள்ள முடியாத அரசாட்சி
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:- நீங்க யாராவது மோடியை பற்றி குறும்படம் எடுத்து விமர்சித்தால் உங்கள் வீட்டிலும் ரெய்டு வரும். விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத அரசாக நரேந்திர மோடி அரசு உள்ளது. விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத அரசாட்சி நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்து இருக்கிறது.

எந்த கொள்கையில் வேறுபடுகிறீர்கள்
இதுவரை சீனா, ரஷ்யா, எகிப்து போன்ற நாடுகள்தான் அந்த வரிசையில் இருப்பதாக நினைத்தோம். இப்போது இந்தியாவும் அந்த வரிசையில் சேர்ந்து இருப்பதை உலகம் முழுவதும் அறிவித்து விட்டார்கள். மத்திய அரசு கொள்கை வேறு என்றால் அதிமுக ஏன் அங்கு இருக்கிறது. எந்த கொள்கையில் உடன்படுகிறீர்கள்.. எந்த கொள்கையில் வேறுபடுகிறீர்கள் என்று சொல்லட்டும் என இரண்டு கட்சியும் சொல்லட்டும் ஒத்துக்கொள்கிறேன். எல்லா கொள்கைகளிலும் உடன்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

எடப்பாடி சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்
இந்தி மொழி திணிப்பு, புதிய கல்விக்கொள்கை திணிப்பு, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதியை பகிர்ந்து அளிக்காமல் இருப்பது நீட் தேர்வு, இதைப்போன்ற முக்கியமான பிரச்சினைகளில் உடன்படுகிறீர்களா.. வேறுபடுகிறீர்களா.. என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொன்னால் மகிழ்ச்சி அடைவேன். முக்கியமான ஐந்தாறு விஷயஙக்ளில் உடன்படுகிறீர்களா.. வேறுபடுகிறீர்களா.. என்ற ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும்.

தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் கேட்கிறோம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படிதான் நீட் தேர்வு அமலாகிறது. நான் அதை மறுக்கவில்லை. தமிழ்நாடு அரசு என்ன கேட்கிறது என்றால் நீங்கள் அமல்படுத்துங்க... எந்த மாநிலங்கள் விரும்புகிறதோ அந்த மாநிலங்களில் அமல்படுத்துங்க... எங்களுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய வெண்டும் என்று கேட்கவில்லையே.. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு விலக்கு தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

மண்டியிடு என்றால் மண்டியிடுவார்கள்
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உடன்படுகிறாரா இல்லையா..அதிமுக உடன்படுகிறதா இல்லையா.. இந்த கேள்விக்கு ஆம் இல்லை என்று பதில் சொல்லட்டும். அதிமுகவிற்கு சட்டாம் பிள்ளையே பாரதிய ஜனதா கட்சிதான். பாரதிய ஜனதா கட்சி எழு என்றால் எழுவார்கள். உட்கார் என்றார் உட்காருவார்கள். மண்டியிடு என்றால் மண்டியிடுவார்கள். காலில் மல்லாந்து விழுந்து கும்பிடு என்றால் கும்பிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications