ஜாக்பாட்.. எல்லாம் கை கூடி வருதே! குஷியில் திமுக! குதிக்கும் காங்கிரஸ்! ஈரோடு கிழக்கில் அதிரிபுதிரி
ஈரோடு: தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்களால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பீவர் தொடங்கி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கும், தனித்து போட்டியிடுமா.. கூட்டணி வைக்குமா.. திமுக என்ன செய்யும் .. காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு தருமா.. அதிமுகவில் உட்கட்சி மோதல் முடிவிற்கு வருமா என்ற கேள்வி நிலவி வருகிறது.

பாஜக தனித்து போட்டி
இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. ஏற்கனவே தேர்தல் பணிகளை செய்ய பாஜக சார்பாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரசுக்கு செல்வதால் பாஜக இங்கே தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. அதிமுகவில் என்ன நடக்கும், கட்சி யாருக்கு செல்லும் என்று தெரியாத நிலையில், பாஜக இங்கு தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தை பாஜக தனது கோட்டை என்று கூறி வருகிறது. அதிமுக எடப்பாடி - பாஜக இடையிலும் நல்ல உறவு இல்லை. இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுத்தாலே அது பாஜகவிற்கு பெரிய பலமாக இருக்கும்.

பாஜக பிளான்
இடைத்தேர்தலில் மட்டும் 10% வாக்குகளுக்கு அருகில் பெற்றுவிட்டால் போதும் லோக்சபா தேர்தலில் அதை வைத்தே பாஜக அதிக இடங்களை அதிமுகவிடம் கேட்க முடியும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களையும் பெற முடியும். அதனால் பாஜக சார்பாக இங்கே மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அல்லது மாநில பாஜக வேளாண் செயலாளர் ஜிகே நாகராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இதில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

அதிமுக போட்டியிட வாய்ப்பு இல்லை
இன்னொரு பக்கம் அதிமுக போட்டியிட வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. கூட்டணி தர்மப்படி தமிழ் மாநில காங்கிரஸ்தான் கடந்த முறை இங்கே வென்றது. அதனால் மீண்டும் அதே கட்சிதான் இங்கே போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவுகிறது. எனவே எடப்பாடி ஒரு வேட்பாளரை நிறுத்தினால், போட்டிக்கு ஓபிஎஸ் இன்னொரு வேட்பளாரை நிறுத்துவார். அப்படி செய்தால் அதிமுக சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். இந்த ரிஸ்க்கை எடப்பாடி எடுக்க விரும்ப மாட்டார். அதனால் பெரும்பாலும் எடப்பாடி இங்கே வேட்பாளரை இறங்குவதை தவிர்ப்பார்.

தமிழ் மாநில காங்கிரஸ்
தமிழ் மாநில காங்கிரஸ் இங்கே போட்டியிட்டாலும் சின்னம் பிரச்சனை உள்ளது. காரணம் இங்கே கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜ் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை இரட்டை இலை சின்னத்திற்கு ஓ பன்னீர்செல்வம் உரிமை கோரினால் சின்னம் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை தனி சின்னத்தில் போட்டியிட எடப்பாடி அழுத்தம் கொடுக்கலாம். இரட்டை இலையில் போட்டியிட்டு தோற்றால் எடப்பாடிக்குத்தான் சிக்கல் என்பதால், தனி சின்னத்திலேயே போட்டியிடுங்கள் என்று எடப்பாடி கூற வாய்ப்பு உள்ளது.

திமுக கூட்டணி
இதனால் எதிர்க்கட்சிகள் வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இப்போது கூட்டணியில் இல்லை. பாஜகவும் தனியாக நிற்பதாக செய்திகள் வருகின்றன. இன்னொரு பக்கம் அதிமுகவும் சின்னம் காரணமாக போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இதனால் தமிழ் மாநில காங்கிரஸ்தான் அவர்கள் கூட்டணியில் இரட்டை இலை இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிடும். அப்படி இருக்கையில், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரிய ஆதரவாக, சாதகமாக மாறுகிறது. இன்னொரு பக்கம் நாம் தமிழரும் போட்டியிடுவதால் எதிர்க்கட்சி வாக்குகள் ஏகமாக பிரியும். மநீம காங்கிரசுக்கு ஆதரவு தர வாய்ப்பு உள்ளதால்.. ஈரோடு கிழக்கு தொகுதியில் கிட்டத்தட்ட திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஜாக்பாட் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications