இலவச வீட்டு மனை பட்டா எதுக்கு? நில அளவீடு எங்கே? ஈரோடு கோபிச்செட்டிபாளையம் ரோட்டில் திரண்ட பெண்கள்
ஈரோடு: தங்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களது நிலத்தை ஆக்கிரமித்தவர்களை அகற்ற கோரியும், பெண்களை ஆபாசமாக மிரட்டும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்றும் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கிராம மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.. காரணம், இங்குள்ள பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட சத்திரம்புதூர், வேட்டுவன்புதூர், புள்ளப்பநாய்க்கனூர், கொடிவேரி மேடு, அம்பேத்கார் நகர், ஒட்டர்பாளையம், மினியப்பன்நகரில் வீடு இல்லாத 650 குடும்பங்களுக்கு, பட்டா வழங்கப்பட்டிருந்தது.

பட்டா மனுக்கள்: சென்றாயன்பாளையம் கிராமத்தில் மாதேஷ்வரன் கோயில் அருகே, கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தன.. இதில், பட்டா பெற்றவர்களில் 30 குடும்பத்தினர் மட்டும் அந்த பகுதியில் குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள்.. எனவே பட்டா பெற்ற மற்ற பயனாளிகள், பட்டா இடத்தை அளவீடு செய்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.. ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை அதிகாரிகள் எடுக்கவில்லை என தெரிகிறது.
அதுமட்டுமல்ல, 5 பேர் கொண்ட கும்பல், டி.என்.பாளையம், குன்றி, கடம்பூர், வாணிப்புத்தூர், அளுக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரிடம், பட்டா பெற்றுத்தருவதாக சொல்லி, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வசூலித்ததோடு, அங்கு அவர்கள் குடியிருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கலெக்டரிடம் மனு: இதையடுத்து, இலவச பட்டா பெற்ற 200க்கும் மேற்பட்டோர், உரிய இடத்தினை தங்களுக்கு அளவீடு செய்து தருமாறு கூறி 2 நாட்களுக்கு முன்பு கோபி சப் கலெக்டர் சிவானந்தத்திடம் திரண்டு சென்று மனு அளித்திருந்தனர்..
கலெக்டரிடம் மனு வரை சென்றுவிட்டதால், பட்டா பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்து வரும் கும்பலுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கிறது.. இதனால், அந்த பெண்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவர்களை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த 200க்கும் மேற்பட்டோர், கொடிவேரி மேடு அருகே வீரசின்னானூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் மறியல்: நடுசாலையில் பெண்கள் உட்கார்ந்து மறியல் செய்ததால், போக்குவரத்து அதிகமாகவே பாதிக்கப்பட்டது.. இதற்கு பிறகு தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..
தங்களுக்கு மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பட்டா உள்ளவர்களை தவிர மற்ற ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும், அப்போதுதான் மறியலை கைவிடுவோம் என்று ஆவேசமாக கூறினார்கள்.. அவர்களது கோரிக்கையை ஏற்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மீண்டும் போராட்டம்: ஆனால், தங்களிடம் உறுதி தந்ததுபோல, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீண்டும் அறிவித்திருக்கிறார்கள். இதனால், கோபி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications