பதவி பறிப்புக்கு பின் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்! தொடர் அமளியால் லோக்சபா ஏப்.3 வரை ஒத்திவைப்பு!
டெல்லி: லோக்சபா எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்றார் ராகுல் காந்தி. லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் சபை நடவடிக்கைகள் ஏப்ரல் 3-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தொடங்கிய நாள் முதலே லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தொடங்கிய உடன், வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தினர். பாஜக எம்.பிக்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இதற்கு எதிராக அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இருதரப்பு அமளியால் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதன்பின்னர் பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி எம்பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பறித்தார். இதனைக் கண்டித்து லோக்சபா, ராஜ்யசபாவில் காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 12 நாட்களாக இரு சபை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த அமளிகளுக்கு நடுவே ஒரு சில மசோதாக்களை மத்திய அரசு இரு சபைகளிலும் நிறைவேற்றி வருகிறது.

முன்னதாக இன்று காலை மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தியும் பங்கேற்றார். பதவி பறிப்பு- தகுதி நீக்கத்துக்குப் பின்னர் நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தி வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல இன்று காலை லோக்சபா, ராஜ்யசபா கூடியதும் அமளி நீடித்தது. இதனால் லோக்சபா தொடங்கிய சில நிமிடங்களிலேயே பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவும் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பகல் 12 மணிக்கு லோக்சபா கூடிய போதும் அமளி நீடித்தது. இதனையடுத்து லோக்சபா நடவடிக்கைகள் ஏப்ர 3-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications