மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க அமெரிக்க தமிழர்கள்.. அரசு நடவடிக்கை.. அமைச்சர்
ஈரோடு: அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து வந்து இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் பயில்வதற்காக இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுதான் நீட் தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஒரு மாணவர் மருத்துவம் பயில முடியும். சிபிஎஸ்இ பாடப்பிரிவை வைத்து வினாக்கள் தயாரிக்கப்படுவதால் தமிழகத்தில் மாநில பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவம் கனவோடு இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் கடினமாக உள்ளது.

இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய அலுவலக கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
அப்போது அதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் தமிழகத்தில் துறைக்கு துறை முன்னேற்றத்தை ஏற்படுத்தி தமிழக முதல்வர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு நிரப்பப்படாமல் உள்ளது. அத்தகைய மாணவர்களுக்கான உரிய பங்கை அரசு அளிக்கிறது. அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications