கடைசி நாள்.. களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல் களம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய இருக்கும் நிலையில், கடைசி நாளான இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அங்கு சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வார்த்தை போர்கள், குற்றச்சாட்டுகள், வாக்குவாதங்கள், கைகலப்புகள், மோதல்கள் என கடந்த ஒரு மாதமாக ஈரோடு தேர்தல் கலைகட்டி இருந்த ஈரோட்டில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருக்கிறது.

இடைத்தேர்தல் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது. பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது.

திமுக, காங்கிரஸ் பிரச்சாரம்
திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனையே அந்த தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தமிழ்நாடு அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்
இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தாமதம் காட்டியது. இதில் கூட்டணி கட்சியான பாஜக போட்டியிட இருப்பதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.எஸ்.தென்னரசுவை அதிமுக வேட்பாளராக அறிவித்தது. அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செந்தில் முருகனை அதிமுக வேட்பாளராக அறிவித்தது.

அதிமுக, பாஜக பிரச்சாரம்
இரட்டை இலை சின்னமே இதனால் முடங்கும் சூழல் ஏற்பட, தேர்தலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் அவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேமுதிக, நாம் தமிழர் பிரச்சாரம்
தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளராக மேனகா ஆகியோர் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்
ஜனவரி 31 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி கடந்த 7 ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்ததை அடுத்து 77 வேட்பாளர்களை கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த கடந்த ஒரு மாதமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறந்த நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

முக ஸ்டாலின் பிரச்சாரம்
கடைசி நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இரவு கோவை வழியாக ஈரோடு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் அக்ரஹாரம் பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். கடைசியாக பெரியார் நகரில் பிரச்சாரத்தை முடித்து அவர் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications