எல்லா பக்கமும் கேட்.. எடப்பாடிக்கு தூது? “பொய்.. பொய்.. அந்த எண்ணமே கிடையாது”.. எகிறிய ஓபிஎஸ்!
ஈரோடு: அதிமுக கட்சிக் கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்பி வருவதாக தகவல் பரவியது. இதுகுறித்த கேள்விக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார் ஓபிஎஸ்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் மாறி மாறி முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது.

எனினும், அதிமுக லெட்டர் பேடை பயன்படுத்தி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிட்டு வந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தி வருவதாக எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இடைக்காலத் தடை செல்லாது என உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைவதற்காக திரைமறைவில் காய்நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ஓபிஎஸ் பல முறை எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்பி வருவதாகவும் தகவல் வெளியானது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த தகவலை கூறி வந்தனர்.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "நான் எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாக பரவும் செய்திகள் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அவருக்கு தூது அனுப்ப எனக்கு எந்த அவசியமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் சேரும் எண்ணம் எனக்கு அறவே இல்லை.
இன்றைய சூழலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடியும். அதுவும், ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் தேர்தல் வெற்றி சாத்தியம். இல்லையென்றால், யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது என்று நான் சொல்லிவிட்டேன். நானும், டிடிவி தினகரனும் ஓரணியில் தான் இருக்கிறோம். எங்களுடன் இணைவது குறித்து சசிகலா தான் முடிவு செய்ய வேண்டும்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications