12-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. ஈரோட்டில் போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்
ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.
இதனால் தற்போது கொங்கு மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. தங்கள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

அருகிலும் பரவியது
சேலத்தில் மட்டும் நடந்து வந்த போராட்டம் திருவண்ணாமலை, திருப்பூர், கோவை என்று அருகருகே இருக்கும் மாவட்டங்களுக்கும் பரவியது. ஈரோடு மாவட்ட விவசாயிகளும் அதன்பின் போராட்டத்தில் குதித்தனர். இதனால் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வித்தியாசம்
விவசாயிகள் தினமும் வித்தியாசமான போராட்டம் நடத்தி வருகிறார்கள். குழிக்குள் இறங்கி மண்ணை மூடி போராடுவது, தண்ணீரில் இறங்கி போராடுவது, ஒப்பாரி வைத்து போராடுவது என்று வித்தியாசமாக போராடி வருகிறார்கள். விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் போட்டும், வாயில் கருப்பு துணி கட்டியும் வித்தியாசமாக போராடினார்கள்.

உண்ணாவிரத போராட்டம்
அதேபோல் சில விவசாயிகள் கடந்த 23-ந்தேதியில் இருந்து உண்ணாவிரதம் செய்து வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து விவசாயிகள் 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. 100க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வருவோரை தடுக்கும் வகையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications