தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி பிப். இறுதியில் அறிவிக்க வாய்ப்பு?
டெல்லி: தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான சட்டசபை தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அது போல் புதுவை, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது.
இதனால் இந்த 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இந்த 5 மாநிலங்களிலும் 2021-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் ஆணையம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை தயார் செய்வது, கூடுதல் வாக்குச் சாவடிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்தது.

சுனில் அரோரா
பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் பங்கேற்றன. ஒவ்வொரு கட்சியினரிடமும் தமிழக சட்டசபை தேர்தலை எப்படி நடத்தலாம் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளனர்.

ஹோட்டல்
இவர்கள் தற்போது கிண்டியில் உள்ள ஹோட்டலில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்கள். மேற்கண்ட 5 மாநிலங்களிலும் இந்த அதிகாரிகள் 6 நாட்கள் இருந்து தேர்தல் குறித்த ஆலோசனைகளை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனைகளில் கருத்தொற்றுமை ஏற்படும் பட்சத்தில் தேர்தல் நடத்துவதற்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

பிப் இறுதியில் அறிவிப்பு
அது போல் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே 5 ஆம் தேதிக்குள்ளோ தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கடந்த 2016 சட்டசபை தேர்தலை காட்டிலும் இந்த முறை முன் கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications