உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை குறுக்கே வராதீங்க.. அப்படி ஓரமா போய் விளையாடுங்க.. சீமான் கலகல பேச்சு
உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஆகியோர் ஓரமா போய் விடுங்கள் என சீமான் கிண்டலாக தெரிவித்தார்.
ஈரோடு : உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஆகியோர் ஓரமா போய் விளையாடுங்க, குறுக்க வராதீங்கப்பா என சீமான் கலாய்த்து தள்ளினார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் சுயேச்சைகள் 73 பேர் போட்டியிடுகிறார்களல். இந்த தேர்தலுக்காக 1,430 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

52 இடங்கள்
52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த பிரச்சாரத்தில் இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இறுதி கட்ட பிரச்சாரம்
நேற்று நடந்த இறுதி கட்ட பிரச்சாரத்தில் சீமான் பேசினார். அப்போது பேசிய அவர் தமிழர் வாழாத நாடில்லை. ஆனால் தமிழர்கள் வாழ உள்ளங்கை அளவு கூட ஒரு நாடு இல்லை. நம்முடைய இனத்திற்காக ஒரு நாடு வேண்டும் என்று போராடியவர் பிரபாகரன். என் மொழி, இனம் வாழ வேண்டும் என்றால் என் தமிழை நேசிக்கிற ஒரு தமிழன் தான் இந்த நாட்டை ஆள வேண்டும்.

மண்ணில் பிறந்தவர்கள்
இந்த நோக்கம் இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு தான் வரும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 கொடுப்போம் என கூறினார்கள். அதை நிறைவேற்றினார்களா? கொடநாடு கொலை பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என சொன்னார்களே எடுத்தார்களா? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்? என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். அதுவும் எடுத்ததாக தெரியவில்லை.

உதயநிதி
இப்போது இருக்கும் பிரச்சினையில் உதயநிதி, அண்ணாமலை எல்லாம் ஓரமா போய் விளையாடுங்க என சீமான் கிண்டலடித்தார். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெல்லும் என கூறுகிறார்கள், காசு கொடுக்காமல் என்னை உங்களால் வீழ்த்த முடியுமா? சுகாதாரமான குடிநீர் தருகிறோம், அனைவருக்கும் இலவச கல்வி தருகிறோம், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்கிறோம் என்று கூறி வாக்குகள் சேகரிக்கிறோம் என சீமான் கலகலப்பாக பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications