செல்வப்பெருந்தகை அப்படி சொன்னாரே! இப்ப செங்கோட்டையன் சொல்வதை பாருங்க!
ஈரோடு: தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர் என தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். விஜய் நடத்தவிருந்த ரோடு ஷோ தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் தவெக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளோம். இந்த கூட்டத்திற்கு 25 ஆயிரம் பேர் முதல் 40ஆயிரம் பேர் வரை வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சி ஏற்பட போகிறது என தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு விஜய் முதல்வராக வேண்டும் என தவெகவினர் போராடி வருகிறார்கள். மக்கள் செல்வாக்கை வலுப்படுத்தும் வகையில் விஜய் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
41 பேர் பலி
இந்த நிலையில் கரூரில் தவெக பொதுக் கூட்டம் நடந்த போது விஜய்யை பார்க்க முண்டியடித்து கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தவெகவின் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
41 பேரின் குடும்பம்
இந்த நிலையில் கரூர் மக்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறவில்லை என விமர்சனம் எழுந்தது. இதையடுத்து 41 பேரின் குடும்பத்தினரையும் மாமல்லபுரத்திற்கு தனது சொந்த செலவில் அழைத்து வந்து விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதுவும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தினார். விஜய் கட்சியில் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அவரது தொண்டர்கள் கட்டுப்பாடு இல்லாமல் தற்குறிகளாக இருப்பதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது.
50 ஆண்டுகள்
இந்த நிலையில்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஒருவர் நேற்று உருவான கட்சியில் இணைவதா என்றெல்லாம் பேசப்பட்டது.
செங்கோட்டையன்
எனினும் செங்கோட்டையனின் இணைப்பு தவெகவுக்கு வலுச்சேர்க்கும் என்றும் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
16 ஆம் தேதி பொதுக் கூட்டம்
இந்த நிலையில் செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் விஜய் தனது அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் 16ஆம் தேதி பொதுக் கூட்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் செங்கோட்டையனும், நிர்வாகிகளும் மனு அளித்துள்ளனர்.
காவல் துறை
அடுத்ததாக காவல் துறையிடமும் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். விஜய்யின் கூட்டத்தை பெருந்துறை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என யூகங்கள் கிளம்பி வரும் நிலையில் ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவரத்தி, விஜய்யை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications