துரோகத்திற்கான நோபல் பரிசு.. எடப்பாடி பழனிசாமிக்கு கொடுங்கள்.. இறங்கி அடித்த செங்கோட்டையன்!
ஈரோடு: துரோகத்திற்காக நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அதனை பெற தகுதியான ஒரே ஆள் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் என்று கூறிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், செப்டம்பர் 5ஆம் தேதி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன்பின் செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

இதன்பின் தேவர் ஜெயந்தியின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதன்பின் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அதில் செங்கோட்டையன் பேசுகையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் எடப்பாடி பழனிசாமியால் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. எம்ஜிஆர் தோல்வியையே சந்திக்காதவர். ஜெயலலிதா ஒரு முறை தோல்வி அடைந்தால், மறுமுறை வெற்றியை பெறுபவர். எடப்பாடியால் வெற்றியை பெற முடியவில்லை என்பதாலேயே, பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினேன்.
ஆனால் சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். விதிகளின் அடிப்படையில் என்னை நீக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளேன். என்னை திமுகவின் பீ டீம் என்கிறார். யார் திமுகவின் பீ டீம் என்பது அனைவருக்கும் தெரியும். நான் திமுகவின் பீ டீம் இல்லை.
ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து குரல் கொடுக்காது ஏன்? எடப்பாடி பழனிசாமி தான் ஏ1ஆக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அந்தியூர் தொகுதி தோல்விக்கு எனது துரோகம்தான் காரணம் என்கிறார் எடப்பாடி. யார் துரோகம் செய்தார்கள் என்பதை ஆதாரத்துடன் வெளியிட உள்ளோ. ஆட்சியை காப்பாற்றிய பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர் எடப்பாடி பழனிசாமி.
துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அதனை எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் என்று கூறிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications