நயினார் நாகேந்திரனுக்கு இதுதான் இறுதித் தேர்தலாக இருக்கும்.. செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், கர்வமும் சுயநலமும் கொண்ட எந்த இயக்கமாக இருந்தாலும், அந்த சாம்ராஜ்யம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது. இதுவே தத்துவம். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று கூறியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில், நயினார் நாகேந்திரனுக்கு இதுதான் இறுதித் தேர்தலாக இருக்கும். இதற்குப் பிறகு அவருக்குக் கட்சிப் பதவி இருக்குமா இல்லையா என்பதை அவர் கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கரட்டூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றி என்பது சரித்திர வரலாற்றில் இடம்பெறப் போகும் ஒரு வெற்றியாக அமையும். ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் வகையிலும், தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழும் காலமாகவும் அது மாறும். அதற்காகத்தான் மனிதநேயத்தோடு விஜய் இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார்.

விஜய் சரித்திர வெற்றி பெறுவார்
அதுமட்டுமல்லாமல், தியாக உணர்வோடு அவர் இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்கிறார். பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பதற்காக, இரவு பகல் பாராமல் அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீர நடை போட்டுக்கொண்டிருக்கிறார். இதற்கு காலம் மே 4-ஆம் தேதி பதில் சொல்லும். சரித்திர வரலாற்றில் இந்தியாவின் முதன்மையான தலைவராக விஜய் விளங்குவார்.
சுயநல இயக்கம்
வாழ்க்கையில் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் கர்வத்தையும் சுயநலத்தையும் மட்டும் கற்றுக்கொள்ளக் கூடாது. கர்வமும் சுயநலமும் கொண்ட எந்த இயக்கமாக இருந்தாலும், அந்தச் சாம்ராஜ்யம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது. இதுவே தத்துவம். தேர்தல் கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரையில், மக்களின் உண்மையான கணிப்பு மிகத் தெளிவாக உள்ளது. உங்கள் வீட்டில் உங்களுக்கே தெரியாமல் விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போட்டிருப்பார்கள். உங்கள் இல்லத்தில் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் வரை அனைவரும், தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துவிட்டார் என்ற எண்ணத்தில் உள்ளனர். அந்த எதிர்பார்ப்பு மே 4-ஆம் தேதி எதிரொலிக்கும். சரித்திர வரலாற்றில் வெற்றி என்ற இலக்கை விஜய் நிச்சயம் எட்டிப்பிடிப்பார்.
இளையராஜா வெளியிட்ட வீடியோ
இளையராஜா நேற்று விஜய் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்த கருத்திற்கு, அனைவரும் மனம் திறந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தமிழகத்தை ஆள வேண்டும் என்று விரும்புகிறார்கள்; அதையே இன்றைய செய்திகளும் எதிரொலிக்கின்றன. சமூக வலைதளங்களில் உலவும் அமைச்சரவை பட்டியல் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. அதிகாரப்பூர்வமாக வெளிவராத தகவல்களைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை.
வைகோவிற்கு பாராட்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்களைக் கட்சி அலுவலகத்திற்கு வரச் சொல்வது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றுதான். எங்கள் தொண்டர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். அவர்கள் தலைவர் விஜய்க்காக எதையும் செய்யக் கூடியவர்கள். இளம் தலைமுறை வாக்காளர்கள் குறித்து வைகோ அவர்கள் மனம் திறந்து பேசியுள்ளார், அவருக்கு எனது பாராட்டுகள்.
150 இடங்களில் வெல்வோம்
2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கு, எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையே இல்லை. 150 முதல் 200 இடங்கள் வரை வெற்றி பெறுவோம் என்பதே மக்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது.
விமானத்தில் வரும்போது கூட 10 முதல் 15 பேர் புகைப்படம் எடுத்தனர். இதெல்லாம் வியக்கத்தக்க ஒன்று. இதுவரை நான் கண்டிராத ஒரு புதிய எழுச்சியை மக்கள் மத்தியில் காண்கிறேன். உலக வரலாற்றில் இரண்டு பெரும் தலைவர்களுக்குப் பிறகு, அத்தகைய ஈர்ப்பை நான் விஜய்யிடம் காண்கிறேன்" இவ்வாறு செங்கோட்டையன் பேட்டியின் போது கூறினார்.














Click it and Unblock the Notifications