ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள்.. ஏன் ஒரே ஜாதி போடவில்லை.. பாஜகவை அட்டாக் செய்த கி.வீரமணி
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிந்த பிறகு சில கட்சிகள் காணாமல் போகும் என்று கி.வீரமணி தெரிவித்தார்.
ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் தோல்வி பயம் காரணமாக எடப்பாடி பழனிசாமி என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு பேசி வருவதாகவும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்தார். இதேபோல் ஓரே நாடு ஒரே மொழி என்று பேசுபவர்கள் ஏன் ஒரே ஜாதி என போடவில்லை என்று பாஜகவையும் விமர்சித்து பேசினார்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜன்னி வந்து விட்டதாகவும், அதனால்தான் தரம் தாழ்ந்து பேசி வருவதாகவும் கடுமையாக சாடினார்.
மேலும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து கி வீரமணி பேசினார். கி.வீரமணி கூறியதாவது:-

மின்மினிகள் மின்சாரம் ஆக முடியாது
ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை பாஜக முன் வைக்கிறது என்றால் அந்தக் கட்சிக்கு சரக்கு கிடையாது. எங்கேயாவது யாராவது தும்ம மாட்டார்களா.. யாராவது இரும மாட்டார்களா என்று பார்த்துக்கொள்வார்கள். இருமல் வந்ததும் முதல்வரால் தான் வந்தது.. திமுகவால் தான் வந்தது.. என்று சொல்வதுதான் அவர்கள் வழக்கம். மின்மினிகள் மின்சாரம் ஆக முடியாது. வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு வரக்கூடிய ஆட்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.

வட மாநிலத்தவர்கள் வேலை செய்வதோடு
அதிக நேரம் வேலை செய்வதால் வட மாநில தொழிலாளர்களை வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என்று பெருகிக்கொண்டே வருகிறது. வட மாநிலத்தவர்கள் வேலை செய்வதோடு நிறுத்தாமல் ஒவ்வொரு இடத்திலேயேயும் சில இடங்களில் நோட்டத்தோடு இருக்கிற வாய்ப்புகளை பெறுகிறார்கள். இன்னும் அதை ஒழுங்குப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். யார் உள்ளே வருகிறார்கள்.. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்.. பதிவுகளை செய்து அவர்களுடைய செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

முதல்வர் பொறுப்போடு இருக்க வேண்டும்
பெரும்பாலான கொள்ளைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை வெளி மாநிலத்தவர்கள் உருவாக்குகிறார்கள். அந்த வெளி மாநிலத்தவர்களை கூலிப்படைகளாகவும் ஆக்குகிறார்கள். எனவே இதை மிக முக்கியாக கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. கூலிப்படை என்பதை குறிவைத்து வைத்து அதை அறவே போக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உண்டு. காவல்துறை இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதல்வர் மிகுந்த அக்கறையுடன் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.

ஏன் ஒரே ஜாதி போடவில்லை
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயம். எல்லாத்திலும் ஒரே .. ஒரே என்று சொல்பவர்கள் ஏன் ஒரே ஜாதி போடவில்லை... ஒரே சுடுகாடு சொல்லவில்லை. இதை செய்தால்தான் மக்கள் சமத்துவம் வரும். யாரும் எந்த மாநிலத்தினுடைய எல்லையையும் உரிமைகளையும் மாற்ற முடியாது., தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு என ஒரு பழமொழி உண்டு. அது மாதிரி இருக்கக் கூடிய சூழலில் அவரவர்கள் அவரவர் உரிமையை சொல்வார்கள்.எனவே ஒரே மொழி என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது. அரசியல் சட்டத்திற்கு விரொதம். அரசியல் சட்டம் கூட்டாட்சியை சொல்கிறது.

எடப்பாடியின் பேச்சே பெருத்த வெற்றி
இது எல்லாவற்றிற்கும் ஒரே பதிலை 2024-ல் மக்கள் தருவார்கள். ஈரோடு இட்டைத்தேர்தலில் திமுக பெரிய அளவில் வெற்றி பெறும். அதற்கு என்ன அடையாளம் என்றால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சே பெருத்த வெற்றியாகும். என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவுக்கு ரொம்ப தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். அவருக்கே தேர்தல் ஜன்னி வந்துள்ளது. ஈரோட்டில் தேர்தல் முடிந்தால் சில கட்சிகள் காணாமல் போகும்" என்றார்.












Click it and Unblock the Notifications