ஈரோட்டில் ஸ்டாலின்! கட்டுக்கட்டாக குவிந்த கோரிக்கை மனு! பத்திரமாக காருக்கு கொண்டு சென்ற பிஎஸ்ஓ!
வாக்கு கேட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் மக்கள்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் ஸ்டாலின் காலை முதலே பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவரிடம் கட்டுக்கட்டாக கோரிக்கை மனுக்கள் குவிந்து வருகின்றன.
வாக்குக் கேட்டு செல்லும் இடங்களில் கையில் மனுக்களோடு நிற்கும் பலரும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அதை ஒப்படைக்கின்றனர்.
ஈரோட்டில் பொதுமக்கள் தன்னிடம் வழங்கும் மனுக்களை அக்கறையுடன் வாங்கிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், அதனை தனது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் பத்திரமாக தனது காருக்கு கொண்டு சென்று விடுகிறார்.

இறுதி நாள்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக ஈரோட்டில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலை 9 மணி முதல் சம்பத் நகர், அக்ரஹாரம், காந்தி சிலை பகுதியில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் கூலிங் கிளாஸ் ஒன்றை அணிந்தவாறு திறந்தவெளி வேனில் நின்றவாறும், நடந்து சென்றும் வாக்கு சேகரித்து வருகிறார்.

கோரிக்கை மனுக்கள்
அவ்வாறு முதல்வர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் கையில் கோரிக்கை மனுக்களோடு நின்ற ஏராளமானோர் தங்கள் மனுக்களை முதலமைச்சர் ஸ்டாலினிடமே நேரடியாக ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை கனிவுடன் பெற்றுக்கொண்ட ஸ்டாலின், அதனை தனது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் உடனுக்குடன் பத்திரமாக தனது காருக்கு கொண்டு சேர்த்தார். குறிப்பாக இளைஞர்களும், இளம் பெண்களும் கோரிக்கை மனுக்களை அதிகளவில் அளித்தனர்.

மாலை பிரச்சாரம்
காலை பிரச்சாரத்திலேயே இப்படியென்றால் இன்னும் மாலை நேர பிரச்சாரத்தின் போது முதல்வரிடம் கூடுதல் கோரிக்கை மனுக்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சக்தி சுகர்ஸ், முனிசிபல் காலனி, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் முதல்வர் மாலை இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொள்ளவுளார். கடந்த ஒரு மாதமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீதிவீதியாக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தபோதெல்லாம் அளிக்காத மனுக்களை இன்று முதல்வரிடம் அளிக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கிடப்பில் போடாமல்
இதற்கு காரணம் அமைச்சர்கள் தேர்தல் பிசியில் தங்கள் மனுக்களை கிடப்பில் போட்டாலும் போட்டுவிடுவார்கள் எனக் கருதி நேரடியாக முதல்வர் கையிலேயே ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications