திமுகவை விமர்சிக்கும் கணவர்.. தலைமைக்கு பறந்த புகார்.. தர்மசங்கடத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன்
ஈரோடு: திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் அக்கட்சியையும் தலைமையையும் கடுமையாக விமர்சித்து வருவது குறித்து நிர்வாகிகள் புகார்கள் கூறியுள்ளது சுப்புலட்சுமிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் துணை பொதுச் செயலாளராக உள்ள சுப்புலட்சுமி முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். இவரது கணவர் ஜெகதீசன். இவர் திமுகவின் தீவிர விசுவாசியாம். கட்சியில் யாரையும் ஜெகதீசன் கடுமையாக விமர்சிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வைகோவை புகழ்ந்து பேசினார்.

வாரிசு பிரச்சினை
வாரிசு பிரச்சினையை கையில் எடுத்த வைகோ திமுகவை விட்டு வெளியேறி பல மதிமுகவை தொடங்கினார். பல ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி தனது கனவில் வந்ததாக கூறி 2018-இல் கருணாநிதியை சந்தித்து பேசினார். திமுகவிலிருந்து வைகோ வெளியேறியதை மறந்து அவருடன் நட்பு பாராட்டுவதை சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

வெட்கம் இல்லை
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: வெட்கம் இல்லை மானம் இல்லை நடத்து ராஜா; நேரம் எப்படி மாறி இருக்குது பாரு ராஜா. துரோகத்தை எதிர்த்து அன்று கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர்கள் நிலை என்ன ராஜாவெட்கம் மானம் ரோஷம் மரியாதை சூடு சொரணை எமக்குள்ளதே; என்ன செய்ய உடன் பிறப்பே என விமர்சித்துள்ளார்.

வைகோ பேசிய உரைகள்
அது போல் இன்னொரு பதிவில் 2016 ஆம் ஆண்டு நால்வர் அணிக்கு தலைமை ஏற்ற வைகோ பேசிய ஏசிய உரைகள் எல்லாம் ஞாபகம் வரவில்லையா? அதை உணராமல் விமர்சிக்கும் என்னை திட்ட வெட்கமாக இல்லையா உமக்கு என கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் இன்னொரு பதிவில் லஞ்சம் இல்லாத தமிழ் நாட்டரசில் ஒரு துறையை சொன்னால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கலாம்; இயலுமா என் தோழா!' என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம்
அது போல் அண்மையில் நடந்த அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணத்தை ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு செய்த திருமணத்துடன் ஒப்பிட்ட ஜெகதீசன், அழிவின் விளிம்பை நோக்கி.. என பதிவிட்டு அவர் வீட்டில் வைக்கப்பட்ட விருந்து, மொய் விருந்து குறித்தெல்லாம் விமர்சனம் செய்துள்ளார். அது போல் மின்சார கட்டண உயர்வு குறித்து ஜெகதீசன் பதிவிடுகையில் வாங்கிய பணத்தை செலவிட முடியாமல் திணறிய எங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்திய முதல்வருக்கு நன்றி என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

திமுகவின் முப்பெரும் விழா
இன்றைய தினம் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அது போல் திமுக துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் சுப்புலட்சுமியும் பங்கேற்கிறார். இந்த நிலையில் சுப்புலட்சுமியின் கணவர் பதிவு திமுகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் தன்னை பற்றிய சுயகுறிப்பில் போற்றுவோர் போற்றட்டும் ,புழுதி வாரித்தூற்றுவோர் தூற்றட்டும் ; ஏற்றதொரு கருத்தை சரியென்றால் பதிவிடுவேன்! என குறிப்பிட்டுள்ளார் ஜெகதீசன்.

தர்மசங்கடம்
திமுகவில் தனது மனைவி முக்கிய பதவியில் இருக்கிறார் என்பதையே மறந்து திமுக தலைவரையே ஜெகதீசன் விமர்சிக்கும் போக்கு குறித்து மொடக்குறிச்சியை சேர்ந்த திமுகவினர் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது கணவரின் பதிவுகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பது அவர் சங்கடப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது












Click it and Unblock the Notifications