மின்சாரம் இன்றி தவிப்பு... சாலை வசதியில்லாததால் மின் கம்பத்தை தோளில் சுமந்து சென்ற பழங்குடிகள்
ஈரோடு : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, மின்வசதி பெறுவதற்காக, மின் கம்பத்தை மலைக்கிராம மக்கள் தோளில் சுமந்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கேர்மாளம் மலைப்பகுதியின் அடர்ந்த வனப்பகுதியில் மீசைக்கோனூரான் தொட்டி என்ற மலை கிராமம் அமைந்துள்ளது. 15 வீடுகள் மட்டும் உள்ள இந்த கிராமத்தில், சோளகர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரையிலும் மின் இணைப்பு வழங்கப்படாத சூழ்நிலையில், சரியான சாலை வசதியும் இல்லை. இதன் காரணமாக இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
Recommended Video
இந்நிலையில், தங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்கம்பங்களை வாகனத்தில் எடுத்து வந்தனர். எனினும், கிராமத்திற்குள் எடுத்துச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், கானக்கரை பகுதியில் மின் கம்பத்தை இறக்கி வைத்து விட்டு மின்வாரிய ஊழியர்கள் சென்று விட்டனர்.

இதனைத் தொடர்ந்து பழங்குடியின மக்கள், தங்கள் கிராமத்திற்கு எப்படியாவது மின்வசதி பெற்று, இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்ற ஆவலில், மின்வாரிய ஊழியர்கள் போட்டுச் சென்ற மின்கம்பத்தை கிராமத்திற்குள் எடுத்து செல்ல முடிவு செய்தனர். இதற்காக, 20க்கும் மேற்பட்டோர், மின்கம்பத்தில் மூன்று இடங்களில், மரக்கட்டைகளால் சுமந்து செல்லும் வகையில் கம்பத்தில் கட்டி, தங்களது தோளில் சுமந்தபடி மலை கிராமத்திற்கு மின்கம்பத்தை கொண்டு சென்றனர்.
பிறந்தது முதல் இதுநாள் வரை தங்கள் கிராமத்தில் மின்சாரத்தையே கண்டிராத அந்த பழங்குடியின மக்கள், எப்படியாவது மின்சாரம் பெற்றுவிட வேண்டும் என்ற வேட்கையில், தோளில் மின்கம்பத்தை சுமந்து சென்றனர். நெஞ்சை உருக்கும் இந்த காட்சியை அப்பகுதியில் உள்ள ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தொழில் நுட்பங்கள் அதிவேகமாக பரவி, புதிது புதிதாக நவநாகரீக உலகத்திற்கு மக்கள் சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில், மின்சார வெளிச்சத்தை கண்ணிலேயே பார்க்காத இதுபோன்ற கிராமங்கள் இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற அவலத்தை எல்லாம் எண்ணிப்பார்க்கும் போது, வெட்கி தலைகுனிய வேண்டியதை தவிர வேறு வழியில்லை...












Click it and Unblock the Notifications