கொடநாடு வழக்கின் உண்மை வெளிவரும்..குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறையில் அடைப்போம்.. மு.க.ஸ்டாலின்!
கொடநாடு வழக்கின் உண்மை விரைவில் வெளிவரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை விரைவில் வெளிவரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அத்தனை பேரையும் பிடித்து சிறையில் அடைப்போம் என்று மு.க.ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
இன்று காலை 10 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் சாலையில் நடந்து மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

கொடநாடு வழக்கு
பின்னர் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் விசாரணை கமிஷன் அறிக்கை நிலையை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடித்தார்கள்.

சிறையில் அடைப்போம்
கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள். கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வெளியில் வரப்போகிறது. அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன், அத்தனை பேரையும் பிடித்து சிறையில் அடைப்போம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு ஜெயலலிதா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆவேசமாக விமர்சித்தார்.

சிபிசிஐடி விசாரணை
நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது, கொடநாடு வழக்கின் மூலம் அதிமுகவை மிரட்ட முடியாது என்று பேசி இருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு வழக்கு குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications