புஸ்ஸி ஆனந்த் முன்பே.. ஈரோட்டில் தவெகவினர் மோதல்.. மாலையை தூக்கி வீசியதால் பெரும் பரபரப்பு
ஈரோடு: ஈரோடு பெருந்துறையில் நாளை தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்துள்ளார். இந்நிலையில் தான் நேற்றைய தினம் கூட்டம் நடைபெற உள்ள இடத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்ற நிலையில் அவர் முன்பு தவெகவினர் வாக்குவாதத்துடன் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜயின் தவெகவில் சேர்ந்துள்ளார். தவெகவின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச்செயலாளர் என்ற 2 பதவிகள் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு செங்கோட்டையனின் சொந்த மாவட்டமாகும்.
இதனால் செங்கோட்டையன் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பெருந்துறையில் இடம் தேர்வு செய்யப்பட்டு கூட்டத்தை சுமூகமாக முடிப்பதற்கான பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். நாளைய தினம் விஜய் ஈரோடு மக்கள் சந்திப்பு பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று இரவு கூட்டம் நடக்கும் இடத்துக்கு தவெகவினர் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வந்தார். அப்போது செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி உள்பட பிற நிர்வாகிகள் வந்தனர். இந்த வேளையில் தவெகவினர் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. தர்மபுரி மாவட்ட தவெகவினர் சிலர் மாலையுடன் புஸ்ஸி ஆனந்தை வரவேற்க சென்றனர்.
அதற்கு ஈரோடு, திருப்பூர் மாவட்ட தவெக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஈரோடு போன்று தர்மபுரி மாவட்டத்திலும் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். அப்போது ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளை பேச விடாமல் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதிருப்தியில் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் மாலையை தூக்கி எறிந்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.













Click it and Unblock the Notifications