எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி
ஈரோடு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி களம் காண முடியுமா என்பதை நாளை பார்ப்பீர்கள், அவர் தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார் என்று தமிழக வெற்றி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றும், அந்த வெற்றி நிகழ்ச்சியில் தான் பங்கேற்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த கருத்துக்கு செங்கோட்டையன் இப்படி பதில் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று கோபிசெட்டிபாளையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தவெக கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில், திரளான தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

உற்சாக முழக்கங்களுடன் சென்ற இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. வழியில், மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலையைகும் அவர் மாலை அணிவித்து வணங்கி, ஊர்வலத்தைத் தொடர்ந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவிலேயே பாதுகாப்பு கருதி காவல்துறையினரால் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதன் பின்னர், தேர்தல் விதிமுறைகளின்படி தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மாவட்டச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட ஐந்து நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தன் அவர்களிடம், வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வேட்புமனு தாக்கல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான் 9 முறை வெற்றி பெற்றதை மக்களின் கொடையாகக் கருதுகிறேன்,அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விஜய் வெற்றி பெற்று நல்லாட்சி தர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஒரு புதிய இயக்கம் உருவாக வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கனவு. மக்கள் மாற்றம் வேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் காலம் பொற்காலமாக அமையும்.
நிச்சயம் மாற்றம் உருவாகும், விஜய் தலைமையில் வெற்றி உண்டாகும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'. வரும் காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் விஜய் தேசியக் கொடியை ஏற்றுவார். நான் மக்களை நேசிப்பவன், மக்களும் என்னைத் நேசிக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். த.வெ.க ஆட்சி அமைப்பதைத் யாராலும் தடுக்க முடியாது; அது உறுதியாக நடக்கும். கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றும், அந்த வெற்றி நிகழ்ச்சியில் தான் பங்கேற்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்ததற்குப் பதிலளித்த அவர், எடப்பாடி பழனிசாமி களம் காண முடியுமா என்பதை நாளை பார்ப்பீர்கள் என்றும், அவர் தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறினார். ஆண்ட கட்சியையும், ஆண்டு கொண்டிருக்கும் கட்சியையும் தவிர்த்து, மாற்றாக ஒரு புதிய இயக்கம் உருவாக வேண்டும் என்பதே மக்களின் கனவு' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications