ஈரோடு பிரசாரத்தில் எடப்பாடி போட்டோவை எடுத்துக்காட்டி உதயநிதி சொன்ன வார்த்தை.. உற்று பார்த்த மக்கள்
ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக உதயநிதி பிரசாரம் செய்தார்.
ஈரோடு: திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடி பேசிய அவர், போட்டோவை எடுத்துக் காட்டி எடப்பாடியைச் சாடினார்
ஈரோடு கிழக்கில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுகவில் இருந்து தென்னரசு போட்டியிடுகிறார்.
இது தவிர நாம் தமிழர், தேமுதிக என்று பல்வேறு கட்சிகளில் இருந்தும் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு
இந்த இடைத்தேர்தலில் ஆளும்கட்சி கூட்டணி வெல்ல வேண்டும் என்று பல திமுக தலைவர்கள் ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய உதயநிதி, "கடந்த மக்களவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைத் தந்தீர்கள்.. இப்போது அமைச்சராக முதல்முறையாக வந்துள்ளேன்.

மக்கள் துரத்தி அடிக்கிறார்கள்
கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். அவர் மிகச் சிறப்பாக பணியாற்றினார். மகன் விட்டுச் சென்ற பணியைத் தந்தை தொடர வந்துள்ளார்.. இந்த முறை அவரது தந்தையை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் இது நடக்கும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் அதிமுக வேட்பாளரைச் செல்லும் இடமெல்லாம் மக்கள் துரத்தி அடித்து வருகிறார்கள். அவரை எங்கும் வாக்கு கேட்கவே விடவில்லை. மக்கள் அந்தளவுக்கு அதிமுக மீது கொந்தளிப்பில் உள்ளார்.

விரக்தி
எடப்பாடி பழனிசாமி இங்குப் பிரசாரத்திற்கு வந்த போதும் வரவேற்பு இல்லை. இதனால் அவர் விரக்தியில் மீசை வைத்த ஆம்பளையா இருந்தால் என்றெல்லாம் பேசி வருகிறார். 2016இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு.. தலைமைச் செயலகத்திலேயே சிபிஐ சோதனை செய்கு பிறகு அலறியது அவரது மீசை.. கோடநாடு என்ற பெயரைக் கேட்டாலே காதுகளை மூடிக்கொள்கிறது அவரது மீசை. தூத்துக்குடியில் அப்பாவி மக்களின் கழுத்தை நெறிக்கும் கயிறாக இருந்தது அவரது மீசை. இரண்டு நாள் ஷேவ் செய்யவில்லை என்றால் எல்லாருக்கும் தான் மீசை வரும்.

மக்களுக்காக குரல் கொடுத்ததே இல்லை
ஈரோட்டில் பெரியார் மண்ணில் வந்து... சமூக நீதி காத்த மண்ணில் வந்து நின்று கொண்டு நீங்கள் ஆம்பளையா என்று கேட்கிறார்" என்று கூறி எடப்பாடி முதல்வராக அறிவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படத்தையும் அவர் எடுத்துக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் இருந்த போது தான் அடிமையாக இருந்தார் என்றால்.. இப்போதும் அவர் அடிமையாகவே இருக்கிறார். மோடி என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்கிறார். மோடியிடம் கட்சி பிரச்சினையைச் சரி செய்ய வேண்டும் என்று எடப்பாடி, ஓபிஎஸ் போகியுள்ளனர். மக்கள் பிரச்சினைக்காக ஒருமுறையாவது சென்றுள்ளனரா..

கமலாலயம்
ஆட்சியில் இருந்த வரை அவர்கள் ஒன்றாகவே இருந்தார்கள்.. ஆட்சி போனாவுடன் இப்போது ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். நான் சட்டமன்றத்தில் சொன்னேன், கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று. எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. ஓபிஎஸ் மட்டுமே நாங்கள் கமலாலயம் செல்ல மாட்டோம் எனச் சொன்னார். ஆனால் இன்று இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயம் வாயிலில் நிற்கின்றனர்.. அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள்.

யாருக்கும் உண்மையாக இல்லை
ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, கூடவே இருந்த ஓபிஎஸுக்கும் நீங்கள் உண்மையாக இல்லை. மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள்.. ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. 500 திட்டங்கள் இதுவரை செய்து முடித்துள்ளோம். சென்னையில் கிங்ஸ் மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள், மதுரையில் கலைஞர் நூலகம் என்று அனைத்தும் கட்டி முடித்துள்ளோம். ஆனால் 2018இல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் அவர்கள் கட்டவில்லை" என்று கூறி ஒற்றை செங்கல்லையும் தூக்கிக் காட்டினார்.

திட்டங்கள்
பெண்களுக்குக் கட்டணமில்லா பயணம், உங்கள் துறையில் முதல்வர், கொரோனா கால நிவாரண தொகுப்பு, மக்களைத் தேடி மருத்துவம், கூட்டுறவு நகைக் கடன் ரத்து, மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி, நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, நம்மைக் காக்கும் 48 என்று திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அவர் பட்டியலிட்டார். மேலும், ஈரோட்டிற்குச் செய்யப்படும் திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டு அவர் வாக்கு சேகரித்தார்.












Click it and Unblock the Notifications