விஜய் மக்கள் சந்திப்பு.. யாராவது பேரிகார்டு மேல ஏறினாங்கனா.. மாவட்ட எஸ்பி சுஜாதா கொடுத்த வார்னிங்!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது பேரிகார்டுகள் மீது தொண்டர்கள் ஏறினால் உடனடியாக வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா வார்னிங் கொடுத்துள்ளார். அதேபோல் ஆம்புலன்ஸ் வழித்தடத்தில் தொண்டர்கள் யாரும் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
கரூர் சம்பவம் நடந்த 82 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் மீண்டும் தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை நாளை தொடங்க உள்ளார். இதற்கு முன்பாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு கூட்டமாக விஜய் மக்களை சந்தித்தார். அதேபோல் புதுச்சேரியில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார். இந்த நிலையில் செங்கோட்டையன் வரவுக்கு பின் தவெகவின் முதல் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.

திட்டமிடுதலில் சிறந்த நிர்வாகியான செங்கோட்டையன், கரூர் சம்பவத்திற்கு பின் நடக்கும் தவெகவின் முதல் பொதுக்கூட்டத்தை தனது சொந்த மாவட்டமான ஈரோட்டிலேயே நடத்துகிறார். விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க க்யூஆர் கோடு, அடையாள அட்டை என்று எந்தவித நிபந்தனைகளும் இல்லை. கர்ப்பிணிகள், குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாரா நேரில் ஆய்வு செய்தார்.
ஆம்புலன்ஸ் வழித்தடம், தண்ணீர் வசதி, ஸ்பீக்கர் வசதி, பேர்கார்டுகள், பார்க்கிங் வசதி, விஜய் வரப்போகும் சாலை, தொண்டர்களுக்கான வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா சில அறிவுறுத்தல்களை தவெகவினருக்கு கொடுத்துள்ளார். அதில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களின் பொறுப்பாளரை அழைத்து ஆலோசிக்க தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் ஆம்புலன்ஸ் வழித்தடத்தில் கட்சியின் தொண்டர்கள் வரக்கூடாது என்றும், கூடுதலாக 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பேரிகார்டுகள் மீது தொண்டர்கள் ஏறினால் உடனடியாக வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். தவெகவினர் பலரும் விஜய்யை பார்க்க மரங்கள், பேரிகார்டுகள், சேர்கள், டிரான்ஸ்ஃபார்மர்களில் ஏறி நிற்பதை தடுக்கவே இந்த அறிவுறுத்தல்களை கொடுக்கப்பட்டுள்ளதாக புரிந்து கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications