ஈரோடு அருகே திக், திக்.. வெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசு பேருந்து.. கிராம மக்கள் உதவியால் மீட்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்து ஒன்று, காற்றாற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பின்னர், பேருந்தை மலைக் கிராம மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, மலைப்பகுதிகளில் கடம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி அரிகியம், கோவிலூர், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், கடம்பூரிலிருந்து தங்கள் ஊருக்கு செல்லவும், சத்தியமங்கலம் செல்லவும் ஆபத்தான நிலையில் உள்ள கரடு முரடான மண் சாலையில், 2 காட்டாறுகளை கடந்முது செல்ல வேண்டியுள்ளது.

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாக்கம்பாளையம் வனப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால், குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசு பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து
கடந்த 10 நாட்களுக்கு பின்னர், சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. சர்க்கரைப்பள்ளம் காட்டாறில் பெருக்கெடுத்து ஒடும் மழைநீரில் சென்ற போது, அரசு பேருந்து பள்ளத்தை கடக்க முடியாமல் பாதியிலேயே நின்று விட்டது. மேலும், பேருந்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தினாலும், பெரிய பெரிய கற்கள் இருந்தததாலும், இடிபாட்டில் சிக்கிய அரசு பேருந்து, ஒரு அடி கூட நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டது.

கடுமையாக போராடி பேருந்து மீட்பு
இதனால் செய்வதறியாது திகைத்த பயணிகள், அங்குள்ள மலைக்கிராம மக்களுடன் இணைந்தும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் சேர்ந்து அரசு பேருந்தை பள்ளத்தில் இருந்து அகற்ற முயன்றனர். இதற்காக அக்கிராமங்களில் இருந்து டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் வரழைக்கப்பட்டது. முன்பகுதியில் டிராக்டரில் கயிறு கட்டியும், பின்பகுதியில் ஜேசிபியை வைத்து தள்ளியும் பேருந்தை அங்கிருந்த அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேரம் கடுமையாக போராடிய பிறகு அரசுப் பேருந்து மீட்கப்பட்டு, கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பேருந்து சேவை தொடர்ந்தது.

பொதுமக்கள் கோரிக்கை
மழை காலங்களில் காட்டாறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து சேவை துண்டிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குரும்பூர்பள்ளம் மற்றும் சர்க்கரைப்பள்ளம் என 2 காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் உடனடியாக கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications