அம்மாடி.. 5 பெட்டி! 77 வேட்பாளர்களால் திணறும் வாக்காளர்கள் - ஈரோடு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 5 வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் வாக்காளர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதான கட்சி வேட்பாளர்கள், சிறிய கட்சி வேட்பாளர், சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் 5 வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளதுடன் ஒருவர் வாக்களிக்க எடுத்துக்கொள்ளும் நேரமும் தாமதமாகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக காலியானதாக அறிவித்து வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

காங்கிரஸ், அதிமுக
திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்தது. பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் கே.எஸ்.தென்னரசு அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

77 வேட்பாளர்கள்
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை முடிந்ததை அடுத்து சுயேட்சைகள் உட்பட 77 வேட்பாளர்களை கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்குப்பதிவு தொடக்கம்
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.

தாமதமாகும் வாக்குப்பதிவு
தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களையும் சின்னங்களையும் தேடி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால் ஒருவர் வாக்களிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாகிறது. எனவே வரிசையில் நிற்கும் கூட்டம் குறையாமல் உள்ளது. மக்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் கால் கடுக்க நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்குவாதம்
இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களுக்கு விருப்பமான வேட்பாளர் பெயர் எந்த பெட்டியில் உள்ளது என்பதை முன்கூட்டியே அறிய வாக்குச்சாவடிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

வாக்காளர்கள் கருத்து
இதுகுறித்து பெண் வாக்காளர் ஒருவர் கூறுகையில், "5 பெட்டிகள் இருப்பது இதுவே முதல் முறை. எனவே கொஞ்சம் சிரமமாக உள்ளது. ஆனால், வெளியில் அதை ஒட்டி இருக்கிறார்கள். அதை பார்த்து சென்றால் எளிமையாக இருக்கும்." என்றார். மற்றொரு ஆண் வாக்காளர் பேசும்போது, "எளிமையாக இருந்தது. வெளியில் ஒட்டி இருப்பதை பார்த்துவிட்டு செல்ல வேண்டும். வாக்களிக்க கால அவகாசம் தருகிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications