ஈரோட்டில் ஒரே பெண்ணை காதலித்த நண்பர்கள்.. வாழ்க்கையை முடித்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வாழ்த்து
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில், ஒரே பெண்ணை சேது மணிகண்டனும், குகநாதனும் காதலித்து வந்துள்ளனர். நண்பர்களான இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்ததால் இறுதியில் என்ன ஆனது தெரியுமா? இதை பாருங்கள்.
ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவருடைய மகன் சேது மணிகண்டன். இவருக்கு 23 வயது ஆகிறது. இவர் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தார். பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடைய மகன் குகநாதன். 26 வயதாகும் குகநாதன், தள்ளுவண்டியில் காளான் விற்பனை செய்து வருகிறார். சேது மணிகண்டனும், குகநாதனும் நண்பர்களாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் சேது மணிகண்டன், தனது வீட்டுக்கு அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தார்களாம். ஆனால் திடீரென அந்த பெண் சேது மணிகண்டனை விட்டுவிட்டு குகநாதனை காதலிக்க தொடங்கினாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சேது மணிகண்டன் தான் காதலித்த பெண்ணின் பிறந்தநாள் என்பதால் தனது செல்போனில் அவருடைய புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்து வாழ்த்து சொன்னாராம்.
இதேபோல் குகநாதனும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்து வாழ்த்து தெரிவித்தாராம். இதனை பார்த்த சேது மணிகண்டன் செல்போனில் அழைத்த குகநாதனை கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இரவில் பவானி அரசு மருத்துவமனை அருகே சேது மணிகண்டன் நின்றுகொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த குகநாதனுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இது முற்றிய நிலையில் குகநாதன் திடீரென தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேது மணிகண்டனின் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் சேது மணிகண்டன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சேது மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சேது மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குகநாதனை கைது செய்தார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஒரே பெண்ணை காதலித்த நண்பர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications