"நாளை பேசுகிறேன்!" அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பரபர! அடுத்து சொன்ன வார்த்தை முக்கியம்
ஈரோடு: அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகக் கட்சி அலுவலகத்தில் இருந்தே நாளை விளக்கமளிப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். இது அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. கட்சியில் இருந்து நீக்கியவர்களை எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்வேன் என்றும் வெளிப்படையாகவே செங்கோட்டையன் கூறியிருந்தார்.

ஒரே காரில் பயணம்
இதற்கிடையே நேற்றைய தினம் மாஜி முதல்வர் ஓபிஎஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியிருந்தார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்த விழாவில் மூவரும் ஒரே காரிலும் கூட பயணித்தனர். இது அதிமுக வட்டாரத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
நீக்கம்
இதற்கிடையே அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்படுவதாகவும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்ததால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன்
இந்த அறிவிப்பு வந்தபோது சில நிமிடங்களிலேயே செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நாளை காலை 11 மணியளவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நாளை காலை விளக்கம் அளிக்கிறேன் என்றார். அதிலும் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்தே விளக்கமளிப்பேன் என்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விளக்கம் தரவுள்ளதாகத் தெரிவித்தார்.
இது முக்கியம்
இதில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாகவே எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், நாளை கட்சி அலுவலகத்தில் இருந்தே விளக்கம் தரப்போவதாக செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அதிலும், நாளை வீட்டில் செய்தியாளர்களைச் சந்திக்கப் போகிறீர்களா இல்லை கட்சி அலுவலகமா என செய்தியாளர் கேட்ட போது.. அழுத்தம் திருத்தமாகக் கட்சி அலுவலகத்தில் இருந்தே சந்திக்கப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
மேலும், செங்கோட்டையனை பார்க்கும்போது அவர் இதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போலவே தெரிந்தது. முகத்தில் டென்ஷனோ சோகமோ இல்லை.. சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் சொன்னார். செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்டபோது கூலாகவே பேசினார். கிளம்பும்போதும் பொறுமையாக வணக்கம் எல்லாம் சொல்லிவிட்டே கிளம்பினார்.
அடுத்து என்ன
இதை வைத்துப் பார்க்கும்போது கட்சியில் இருந்து தான் நீக்கப்படுவது உறுதி என்பதை செங்கோட்டையன் எதிர்பார்த்தே காத்திருந்ததாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் தான் அவர் நாளை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமாகப் பேசவுள்ளதாகக் கூறியுள்ளார். நாளை காலை அவர் முக்கிய தகவல்களைப் பகிர்வார் எனத் தெரிகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சென்றவர்களே இணைத்தால் மட்டுமே தேர்தல் வெற்றி சாத்தியம் என செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை நாளை வெளியிடலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications