ட்விஸ்ட்.. பின்வாங்கிய அமமுக.. ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு சப்போர்ட்டா? "அதுக்கு" சான்ஸ் இருக்கா?
அமமுக கடந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவே பெற்றது. அவர்களுக்கு பெரிதாக வாக்குகள் இல்லை.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பின்வாங்கி உள்ளது. அமமுக கட்சியின் இந்த நிலைப்பாடு ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக மாறி உள்ளது. அமமுகவின் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து அந்த கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

அதிமுக
தாக்கல் செய்ததோடு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அவர் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் அமமுக கட்சி தனது வேட்பாளரை வாபஸ் வாங்கி உள்ளது. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சின்னம் இல்லை
இது தொடர்பாக கழகத்தின் சார்பில் 27.01.2023 மற்றும் 31.01.2023 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம்.

தேர்தல்
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஓ பன்னீர்செல்வம் இரட்டை இலைக்கு ஆதரவு கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் பாஜகவும் இரட்டை இலைக்கு ஆதரவு கொடுக்கும் என்று கூறிவிட்டது. ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை
இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிலையில்தான் தற்போது அமமுகவும் இங்கே போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால் முன்பு சிதறும் நிலையில் இருந்த எதிர்கட்சி வாக்குகள் தற்போது அதிமுகவிற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அதிமுக
இந்த நிலையில்தான் அமமுக அதிமுகவின் வேட்பளாருக்கு ஆதரவு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிடிவி தினகரன் பாஜகவுடன் கொஞ்சம் நட்பாக இருந்து வருகிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வத்துடனும் அவர் நட்பாக இருப்பதாக அறிகுறிகளை காட்ட தொடங்கி உள்ளார். ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் விரைவில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போக ஒருங்கிணைந்த அதிமுக - அமமுக - பாமக என்ற பெரிய கூட்டணியை உருவாக்கவும் பாஜக முயன்று வருவதாக பல்வேறு தகவல்கள் வர தொடங்கி உள்ளன. 2024 நாடளுமன்ற தேர்தலுக்காக பாஜக இப்படி ஒரு திட்டத்தை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

அமமுக ஆதரவு
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக அதிமுக வேட்பாளரை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமமுக கடந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவே பெற்றது. அவர்களுக்கு பெரிதாக வாக்குகள் இல்லை. அதேபோல் அந்த தொகுதியிலும் அமமுகவிற்கு பெரிய வாக்கு வங்கியும் இல்லை. அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்தாலும் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், சிதறக்கூடிய வாக்குகள் மொத்தமாக அதிமுக பக்கம் வரும் வாய்ப்புகள் உள்ளன. அமமுக என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications