வாசற்படியில் பாட்டி.. பக்கத்தில் ஒருத்தரும் போகல.. இவரெல்லாம் ஒரு மகளா.. அதிர்ச்சியில் சத்தியமங்கலம்
கொரோனா பாதித்த தாயை, வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை பெற்ற மகள்
ஈரோடு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வயதான பாட்டியை, அவரது மகளே வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சேர்ந்தவர் அந்த பாட்டி... 65 வயதுக்கு மேல் இருக்கும்..இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
செவ்வாய்கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது!
3 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது.. இவரது கணவர் எப்போதோ இறந்துவிட்டார்.. அதனால், அதே பகுதியில் உள்ள தன்னுடைய மகள் வீட்டில்தான், இவர் வசித்து வந்தார்.
தொற்று
இந்த நிலையில், பாட்டிக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சரியில்லை.. காய்ச்சலும் அதிகமானது.. அதனால், கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெஸ்ட் செய்து பார்த்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருமகனும்
இதனையடுத்து பாட்டி வீட்டிற்கு வந்தபோது, அவரை பெற்ற மகளே வீட்டிற்குள் விடவில்லை.. தொற்று இருப்பதால், தங்களுக்கும் பரவிவிடும் என்று நினைத்து வீட்டிற்குள்ளேயே மகளும், மருமகனும் சேர்க்கவில்லை.. இதனால் எங்கு போவது என்று தெரியாமல், அந்த பாட்டி, வீட்டு வாசற்படியிலேயே உட்கார்ந்துவிட்டார்.. பசிக்கு சாப்பாடும் தரவில்லை.. மகள் எப்படியாவது தன்னை உள்ளே அழைத்து கொள்வார் என்று நம்பி, காத்து கொண்டே இருந்தார்.
உஷார்
பாட்டி இப்படி உட்கார்ந்திருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினரும் உஷாராகிவிட்டனர்.. அதனால் பக்கத்தில் வரவே பயந்தனர்.. இந்த விஷயம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.. உடனடியாக சாப்பாடு எடுத்து கொண்டு வந்து பாட்டிக்கு தந்தனர்.. குடும்பத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அம்மாவை வீட்டுக்குள் சேர்க்க முடியாது என்று அவரது மகள் பிடிவாதமாக இருந்தார்..
ராத்திரி
இதன்பிறகு சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர்.. இவர்கள் வந்து அந்த மகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. "இன்னைக்கு ஒரு ராத்திரிக்கு மட்டும், அம்மாவை வீட்டிற்குள் தங்க அனுமதி கொடுங்கள்.. காலையில் வந்து நாங்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறோம்" என்றனர்.. அப்போதும் அந்த மகளின் மனம் இறங்கவில்லை. இதையடுத்து, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தங்கள் வீட்டின் காம்பவுண்டுக்குள் பாட்டியை தங்க வைக்க அனுமதி தந்தனர்..
பாட்டி
ராத்திரி எல்லாம் பாட்டி அங்கேயேதான் இருந்தார்.. இன்று காலையில்தான் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வயதான அம்மாவை, பெற்ற மகளே வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனாவால் நாம் இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டி வருமோ?!