"ரொம்ப கவலையா இருக்கு.." பரவும் ஏஐ டீப் ஃபேக் வீடியோக்கள்.. முதல்முறையாக கருத்து சொன்ன பிரதமர் மோடி
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஏஐ கலாச்சாரம் குறித்தும் டீப் பேக் வீடியோக்கள் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பம் இப்போது அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக இந்த சாட்ஜிபிடியின் வெற்றி என்பது மற்ற ஏஐ நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பூஸ்டாக அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். இது நமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது.

அதேநேரம் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி படங்கள் மற்றும் வீடியோக்களும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இப்படி ஏஐ என்பது மிகப் பெரிய சிக்கலாக இருக்கும் நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி: டீப் ஃபேக் வீடியோக்களை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக எச்சரித்த பிரதமர் மோடி, இது பெரிய கவலையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து எச்சரிக்குமாறு சாட்ஜிபிடி குழுவிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி கர்பா இசைக் கருவியை இசைப்பது போல இருந்த ஏஐ வீடியோவை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, "சமீபத்தில் நான் ஒரு கர்பாவை இசைத்துப் பாடலைப் பாடுவது போன்ற வீடியோவைப் பார்த்தேன். இது போலப் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. இதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு காலத்தில், நாம் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம்" என்றார்.
முதல்முறை: பிரதமர் மோடி ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் தன்னை பற்றிப் பரப்பப்பட்ட போலி ஏஐ இமேஜ் அல்லது வீடியோக்கள் குறித்தும் கருத்து கூறுவது இதுவே முதல்முறையாகும்.
சமீபத்தில் தான் பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து எடிட் செய்திருந்தனர். அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. ஏனென்றால் அந்த வீடியோவை பார்த்தால் அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று கண்டுபிடிப்பதே கஷ்டம். அந்தளவுக்கு அது தத்ரூபமாக இருந்தது. அமிதாப் பச்சன் தொடங்கி பலரும் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அமைச்சரும் இதில் விளக்கமளித்திருந்தார்.
போலி வீடியோக்கள்: மேலும், அத்துடன் நிற்காமல் கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோரின் மார்பிங் டீப் பேக் வீடியோக்களும் கூட இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது. வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பம் மேம்படும் போது இவை மேலும் மேலும் தத்ரூபமானதாக மாறும். அப்போது எது ஒர்ஜினல் இமேஜ், எது போலி இமேஜ் என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும்.
தண்டனை: இது குறித்து ஐடி அமைச்சகம் கடந்த வாரம் சமூக ஊடக தளங்களுக்குச் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அவர், "ஆன்லைன் தளங்களில் தவறான தகவல்கள் பரவினால் அதைத் தடுப்பது அவர்களின் கடமை. இதுபோல பரவும் போலி வீடியோ குறித்த தகவல் கிடைத்தால் உரிய ஆய்வு செய்யப்பட்டு அடுத்த 36 மணி நேரத்தில் அதை அகற்ற வேண்டும்" என்றார்.
டிஜிட்டல் ஸ்பேஸில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதுபோல போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை உருவாக்குவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications