மயிலாடுதுறை அருகே.. நாட்டமை பட பாணியில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்.. போலீசில் புகார்
மயிலாடுதுறை: பூம்புகாரில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் 9 குடும்பங்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video
பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி இரு தரப்பு மீனவர்கள் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த மோதலில் படுகாயம் அடைந்த தமிழ்வாணன் என்பவர் சில நாட்கள் கழித்து உயிரிழந்தார்.
இதனால் எதிர் தரப்பினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட 9 பேர் ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்த நிலையில் தங்களின் 9 குடும்பங்களை பூம்புகார் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக சுகந்தன், சந்தோஷ், பிரதீப் குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், "பிரச்சனை நடந்து 15 நாட்களுக்கு பிறகு தமிழ்வாணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார். ஆனால் பழிவாங்கும் நோக்கத்துடன் எங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளோம். இந்த நிலையில் பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் எங்கள் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்து இருக்கின்றனர். கிராமத்தில் உள்ள மற்ற குடும்பத்தினர் யாரும் எங்களுடன் பேசக்கூடாது என உத்தரவிட்டு உள்ளனர். மீறி பேசினால் ரூ.40 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரித்து இருக்கிறார்கள்.
எங்களுடன் பேசிவிட்டு அபராதம் செலுத்தாதவர்களை ஊரை விட்டு விரட்டி விடுவோம் எனவும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதோடு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications