"வந்ததே கோபம்!" காங். அலுவலகம் சூறையாடல்.. செய்தது வேறு யாரும் இல்லை! காங். தொண்டர்கள்தான்! பரபரப்பு
காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தில் இப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இப்போது பூபேந்திர படேல் முதல்வராக உள்ள நிலையில், அங்கு இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் டிச. 8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

குஜராத்
அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இருப்பினும், சில தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு சரி இல்லை என்றும் போராட்டங்கள் அரங்கேறி வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு
குஜராத்தில் ஜமால்பூர்-காடியா தொகுதியில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ ஆக இருக்கும் இம்ரான் கெடவாலாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் ஜமால்பூர்-காடியா தொகுதியில் மஜ்லீஸ் கட்சியின் சபீர் கப்லிவாலா மற்றும் பாஜகவின் பூஷன் பட் ஆகியோரை எதிர்த்துக் களமிறங்குகிறார். இருப்பினும், காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா நில மாபீயாக்களுடன் தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் தொண்டர்களே சாடியுள்ளனர்.

சூறையாடினர்
அவரால் நிச்சயமாக இந்த முறை தேர்தலில் வெல்ல முடியாது எனச் சாடிய தொண்டர்கள், குஜராத் மூத்த தலைவர் பாரத்சிங் சோலங்கி சீட்களை விற்பதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், அகமதாபாத்தில் உள்ள கட்சித் தலைமையகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள், பாரத்சிங் சோலங்கியின் போஸ்டர்களை எரித்தனர். அத்துடன் காங்கிரஸ் அலுவலகத்தையும் அவர்கள் சூறையாடினர்.

வெல்ல முடியாது
இந்த தொகுதியை பாஜகவுக்கு தாரைவாத்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இம்ரானுக்கு இந்த தொகுதியில் மீண்டும் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் சாடினர். கடந்த 2017 தேர்தலில், இம்ரான் கெடவாலா மொத்தம் பதிவான வாக்குகளில் 58 சதவீதத்தைப் பெற்று பாஜகவை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவிலும் அதிருப்தி
காங்கிரஸில் மட்டுமின்றி பாஜகவிலும் கூட வேட்பாளர் தேர்வு தொடர்பாகக் குஜராத்தில் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. ஆளும் பாஜக தனது 160 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் 5 அமைச்சர்கள், சபாநாயகர் உட்பட 38 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பை வழங்கவில்லை. 6 முறை பாஜக எம்எல்ஏவாக இருந்த மதுபாய் ஸ்ரீவஸ்தவ் தனக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேச்சையாகக் களமிறங்குகிறார்.

கைவிரித்த முதல்வர்
இது பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வாய்ப்பு கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் அம்மாநில பாஜக முதல்வர் முதல்வர் பூபேந்திர படேலிடம் கேட்டுள்ளனர். இருப்பினும், வேட்பாளர் தேர்வில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் அனைத்தையும் டெல்லி தலைமை முடிவு செய்கிறது என்று கூறி பூபேந்திர படேல் கைவிரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications