காதலுக்கு எதிர்ப்பு.. பெண்ணை கல்யாணம் செய்து வைப்பதாக ஏமாற்றி இளைஞரை ஆளில்லா இடத்தில் கொன்ற தந்தை
ஓசூர்: ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே பேரிகை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காண்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயண செட்டியார் (50). இவர் பெங்களூரு ஜேபி நகர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
எதிர்ப்பு
இவரது காய்கறி கடை அருகே கடை நடத்தி வருபவர் வசந்த் (25). இவரும் நாராயண செட்டியாரின் இரண்டாவது மகளான சௌமியாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் நாராயண செட்டியாருக்கு தெரியவரவே குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மனம் நொந்த தந்தை
காதல் விவகாரத்தில் மனம் நொந்துபோன நாராயண செட்டியார் தனது மகள் சௌமியாவை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு வசந்திடம் "உனக்கும் எனது மகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன் வா" என்று ஆசை வார்த்தை கூறி ஒசூர் அருகே தனது சொந்த ஊரான காண்றப்பள்ளி கிராமத்திற்கு அவரை அழைத்து வந்துள்ளார்.
சரண்
காரில் வந்த இவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் குடிபோதையில் இருந்த நாராயண செட்டியார் வசந்தை சராமரியாக உருட்டு கட்டை மற்றும் கற்களாலும் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து நாராயணசெட்டியார் பேரிகை காவல் நிலையத்தில் நள்ளிரவில் சரணடைந்துள்ளார்.
பரபரப்பு
இதை கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த இளைஞர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.