ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்!
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி பாதையில் முக்கிய மைல்கல் ஆக உலகின் முன்னணி பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரேலின் அரசு நிறுவனமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI), தமிழ்நாட்டில் அதிநவீன ரேடார் உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளது.
இதற்கான தொழிற்சாலை கட்டுமான பணிகள் ஓசூர் அருகே சூளகிரியில் ஏற்கனவே துவங்கியிருக்கும் வேளையில் 2027 முதல் இஸ்ரேலிய ரேடார்கள் தயாராக உள்ளது. தமிழ்நாட்டை உலக பாதுகாப்பு உற்பத்தி வரைபடத்தில் நிறுத்தும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

ஓசூரில் ரூ.850 கோடி முதலீடு!
இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸின் ELTA Systems பிரிவும், இந்தியாவின் DCX Systems நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ELTX Systems Pvt Ltd என்ற கூட்டுத் நிறுவனத்தின் மூலம் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தொழிற்பேட்டையில் இந்நிறுவனத்திற்கான புதிய உற்பத்தி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
சுமார் ரூ.850 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் 2027 ஏப்ரலுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ரேடார் உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை பணிகள் தொடங்கப்படும்.
இந்தியாவில் தயாராகும் இஸ்ரேலிய ரேடார்கள்
இந்த புதிய உற்பத்தி மையத்தில் வான்வழி ரேடார்கள் மற்றும் தரைவழி கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் தயாரிக்கப்படவுள்ளன. இதன் மூலம் இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான முக்கிய ரேடார் அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வாய்ப்பு உருவாகிறது.
இந்த திட்டம் வெறும் உற்பத்தி முதலீடாக மட்டுமல்லாமல், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
40 ஆண்டு இந்தியா - இஸ்ரேல் நட்புறவு
40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசும், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், செயற்கைக்கோள்கள், ரேடார்கள் மற்றும் உளவு தகவல் சேகரிப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் IAI-யின் தயாரிப்புகள் இந்திய ராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டுக்கு புதிய அடையாளம்
ஓசூர் ஏற்கனவே வாகன உற்பத்தி, மின்னணு சாதனங்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்களின் முக்கிய மையமாக வளர்ந்துள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு உற்பத்தித் துறையிலும் முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.
உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டை முதலீட்டு தளமாக தேர்வு செய்வது, மாநிலத்தின் தொழில்துறை சூழல் மற்றும் திறமையான மனிதவளத்தின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது. 2027 முதல் ஓசூரில் தயாராகும் இஸ்ரேலிய ரேடார்கள், தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய அத்தியாயமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications