ரூ.9000 கோடி.. ஓசூரை பார்த்து பல நகரங்கள் வியக்க போகுது.. வருது பெரிய மாடர்ன் சிட்டி.. செம அறிவிப்பு
ஓசூர்: ஒசூரில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்டமான கடற்கரை ஸ்டைல் நகரங்களை அமைக்க சாம்பியன்ஸ் குரூப், அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக உள்ளூர் நகரம் ஒன்றில் உலகத் தரம் வாய்ந்த கடற்கரை நகரம் அமைக்கப்பட உள்ளதால், நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒசூரில் 100 ஏக்கர் பரப்பளவில் 'சாம்பியன்ஸ் பீச் வேலி' என்ற பெயரில் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது. இது ஒரு தன்னிறைவு பெற்ற ஆடம்பர கடற்கரை ஸ்டைல் நகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரிஸ்டல் லாகூன் பாணியிலான வீடுகள், பிரத்யேக வில்லாக்கள், பிராண்டட் சேவை அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் திட்டமிட்ட மேம்பாடுகள் இதில் அடங்கும்.

அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் மற்றும் தனிப்பட்ட லாகூன் கடற்கரைகளுடன், இது இயற்கை, புதுமை மற்றும் ஆடம்பரத்தின் சங்கமமாக உலகளாவிய வாங்குபவர்களுக்கு ஒரு தனித்துவமான வாழ்க்கை முறையை வழங்குகிறது.
ஓசூர் கடற்கரை நகரம்
ஏற்கனவே ஓசூரில் அமையவுள்ள "அறிவுசார் பெருவழித்தடத்திற்கு - Knowledge Corridor" ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தை உருவாக்க ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான டெண்டரை TIDCO வெளியிட்டுள்ளது.
ஓசூர் நகரை முக்கிய தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) இந்த புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ஓசூரில் தொடரும் முதலீடுகள்
இந்த அறிவுசார் பெருவழித்தடம் சுமார் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், வெளிப்புற சுற்றுச் சாலை, துணைக்கோள் நகர சுற்றுச் சாலை மற்றும் முக்கிய புறவழிச் சாலைகள் வழியாகப் பரவியிருக்கும்.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை (OMR) போல, தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாக இந்த பெருவழித்தடம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களை ஓசூர் பகுதிக்கு ஈர்ப்பது TIDCO-வின் முக்கிய நோக்கமாகும்.
ஓசூர் முன்னேற்றம்
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் நவீன நகர்ப்புற வசதிகளுடன் இந்த பெருவழித்தடம் பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டதாக உருவாக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தொழில் மற்றும் அறிவுசார் வளர்ச்சி மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரிதும் உதவும்.
தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசகர், அடுத்த 30 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை உருவாக்குவார். இது திட்டத்தின் மூலோபாய திசை, பிராண்டிங் மற்றும் வளர்ச்சித் துறைகளை விவரிக்கும். மேலும், நிலப் பயன்பாட்டிற்கான ஒரு விரிவான மாஸ்டர் பிளானையும் தயாரிப்பார்.
பயோடெக், ஃபின்டெக் மற்றும் கல்வி போன்ற முன்னுரிமைத் துறைகளைக் கண்டறிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசனைகள் நடத்தப்படும். திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமும் உருவாக்கப்பட்டு, இயற்பியல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னப்பள்ளி கிராமத்தில், ஒசூர் வர்த்தக மையம் அமைக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ₹60 கோடி மதிப்பீட்டில், 27.36 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமையவுள்ளது.
இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) விரிவான ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வு முடிவடைந்த நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டமும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் வடிவமைக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications