10 ரூபாய் கறிக்குழம்பு கேட்ட நபர்.. தாசில்தார் ஆபீஸ் எதிரே நடுங்க வைத்த 10 நிமிடம்.. நடந்தது என்ன
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் வெறும் 10 ரூபாய் பணத்தகராறால் ஏற்பட்ட மோதல், ரத்தக் களரியான கொலை முயற்சித் தாக்குதலில் முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்றாலும் சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை. என்ன நடந்தது?
சங்காரெட்டி மாவட்டம் பீராம்குடா பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே 'ஸ்ரீ சாய் கறி பாயிண்ட்' (Sri Sai Curry Point) என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த கடையை உதய் (27) மற்றும் அஜய் (19) ஆகிய 2 சகோதரர்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு, அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர் இந்தக் கடைக்கு வந்துள்ளார். அவர் கடையின் ஊழியர்களிடம் 10 ரூபாய்க்கு மட்டும் கறி கிரேவி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள், தங்களது கடையில் ஒரு பாக்கெட் குழம்பின் குறைந்தபட்ச விலையே 30 ரூபாய் தான் என்றும், 10 ரூபாய்க்கு வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
10 ரூபாய் கறி குழம்பு
இதனால் ஆத்திரமடைந்த ஜீவரத்தினம், கடை உரிமையாளர்களான சகோதரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறினார். சிறிது நேரத்தில் ஒரு நீண்ட வாளுடன் மீண்டும் கடைக்குத் திரும்பிய ஜீவரத்தினம், கண்ணிமைக்கும் நேரத்தில் கடைக்குள் புகுந்து உதய் மற்றும் அஜய் ஆகியோரைத் தாக்கத் தொடங்கினார். அவர்கள் தப்பித்து ஓடாமல் இருப்பதற்காக, கடையின் ஷட்டரை உள்ளே இருந்து பூட்டிவிட்டு இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்த இந்தத் தாக்குதலில், சகோதரர்கள் இருவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள அலறித் துடித்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், கடையின் ஷட்டரைத் திறந்து அவர்களை மீட்டனர்.
ஐசியூவில் அனுமதி
இந்தக் கொடூரத் தாக்குதலில் உதய் மற்றும் அஜய் ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அமீன்பூர் காவல் ஆய்வாளர் நரேஷ் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் ஜீவரத்தினம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 10 ரூபாய்க்காக நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாசில்தார் அலுவலகம் எதிரே
இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய ஜீவரத்தினம், சம்பவத்தின் போது போதையில் இருந்தாரா அல்லது முன்விரோதம் ஏதும் இருந்ததா என்ற கோணத்திலும் அமீன்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
, கடை ஊழியர்கள் விலையைச் சொல்லி மறுத்தபோது, "என்னை மதிக்காமல் இவ்வளவு அலட்சியமாகப் பேசுகிறாயா?" என அவர் ஆவேசமடைந்தாராம். மக்கள் நடமாட்டம் மிகுந்த வட்டாட்சியர் அலுவலகம் அருகிலேயே, ஒரு நபர் நீண்ட வாளுடன் வந்து ஷட்டரை மூடிவிட்டு கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது, அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications