தெலுங்கானா: ஹைதராபாத் ரசாயன கிடங்கில் தீ- 9 பேர் பலி; நாகாலாந்து தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதேபோல நாகாலாந்து மாநிலம் திமாப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர்.
ஹைதராபாத் நம்பள்ளி பஜார்காட் பகுதியில் இன்று காலை கெமிக்கல் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த குடோனில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இத் தீ மளமளவென பரவி மேலே இருந்த அடுக்குடிமாடி குடியிருப்புகளிலும் பரவியது. பெரும் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.

இத்தீவிபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 16 பேரை தீயணைப்புத்துறையினர் பலத்த காயங்களுடன் மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நாகாலாந்து: நாகாலாந்தின் திமாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாகா இனமக்கள் அல்லாத பிற இனத்தவர் குடியிருக்கும் குடிசை பகுதிகளில் இத்தீவிபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பற்றி எரிந்தது. தீபாவளி பட்டாசு வெடிகளின் சிதறலில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி மொத்தம் 5 பேர் பலியாகினர்.












Click it and Unblock the Notifications