ஒரு இளைஞரும்.. 2 பெண்களும்.. தெலுங்கானாவில் நடந்த கூத்தை பாருங்க.. 2 காதலிகளையும் கரம்பிடித்த இளைஞர்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் 2 பெண்களை காதலித்து குடும்பத்தினர், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் ஒரே நேரத்தில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா தேவ். இவருக்கும் லால் தேவி, ஜால்கரி தேவி என்ற 2 பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. சூர்யா தேவ் ஒரே நேரத்தில் லால் தேவி, ஜால்கரி தேவியை காதலிக்க தொடங்கினார்.
ஒரே நேரத்தில் 2 பேரை காதலிப்பதை எந்த பெண்களும் விரும்பமாட்டார்கள். இதனால் லால் தேவியை காதலிப்பது ஜால்கரி தேவிக்கும், ஜால்கரி தேவியை காதலிப்பது லால் தேவிக்கும் தெரியாமல் சூர்யா தேவ் பார்த்து கொண்டார். இருவருக்கும் தனித்தனியாக அவர் நேரம் ஒதுக்கினார்.

இதற்கிடையே தான் எவ்வளவு நாட்கள் தான் தனது 2 காதல்களை காதலிகளிடம் மறைப்பது என்று சூர்யா தேவ் நினைத்தார். அதோடு ஜால்கரி தேவி, லால் தேவி ஆகியோரிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று அவர் நினைத்தார். அதன்படி சூர்யா தேவ் இருவரிடமும் தனக்கு 2 காதல் உள்ளது. 2 பேரையும் காதலிக்கிறேன். 2 பேருடனும் வாழ விரும்புகிறேன். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உண்மையை உடைத்தார்.
சூர்யா தேவின் இந்த செயலுக்கு காதலிகள் ஜால்கரி தேவி, லால் தேவி ஆகியோரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தான் ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது ஜால்கரி தேவி, லால் தேவி ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ‛‛இருவரையும் சேர்ந்தே திருமணம் செய்து கொள்ளுங்கள். நாங்கள் 2 பேரும் மனைவியாக இருக்கிறோம்'' என்று சூர்யா தேவிடம் கூறியுள்ளனர். அதனை கேட்ட சூர்யாதேவ் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.
அதோடு தனது திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்த அவர் முடிவு செய்தார். இதற்கு குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2 பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்று சூர்யாதேவிடம் கூறியுள்ளனர். அதேபோல் அந்த பெண்களின் மனதை மாற்றவும் முயற்சி நடந்தது.
ஆனால் 3 பேரும் தங்களின் முடிவில் உறுதியாக இருந்தனர். வாழ்ந்தால் 3 பேரும் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக கூறினர். இதையடுத்து குடும்பத்தினர், ஊர் பெரியவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர். சூர்யா தேவ் திருமண அழைப்பிதழை அச்சிட்டார். அதில் மணமகள்கள் என்று ஜால்கரி தேவி மற்றும் லால் தேவி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவர்களின் திருமணம் அசிபாபாத் மாவட்டம் கோமரம் பீம் என்ற இடத்தில் வெகு விமரிசையாக நடந்தது.
2 காதலிகளுக்கும் சூர்யா தேவ் தாலி கட்டினார். அதன்பிறகு அவர் 2 காதலிகளின் கைகளை பிடித்து சடங்குகள் செய்தார். குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் சூர்யாதேவ் தனது 2 மனைவிகளின் கைகளை பிடித்து வலம் வந்து சடங்குகள் செய்யும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் மேளச்சத்தம் கேட்கிறது.
நம் நாட்டில் இந்து திருமண சட்டத்தின்படி ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இருப்பினும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவம் நடந்து வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டில் தெலுங்கானா அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் 2 பெண்களை திருணமம் செய்தார். அதேபோல் 2022ல் ஜார்கண்ட் மாநிலம் லோஹார்தகாவை சேர்ந்த இளைஞர் 2 பெண்களை கரம் பிடித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications