பசுவுக்காக இஸ்லாமியரை கொன்றுவிட்டு “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிடுகிறார்கள் - நடிகை சாய் பல்லவி வேதனை
ஐதராபாத்: காஷ்மீர் பைல்ஸ் படத்தில் வருவதை போல் 1990களில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதற்கும், தற்போது பசுவுக்காக இஸ்லாமியர் அடித்துக் கொல்லப்படுவதற்கும் என்ன வித்தியாசம் என நடிகை சாய் பல்லவி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Recommended Video
தெலுங்கில் ரானா டகுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்து இருக்கும் விரட்டா பர்வம் திரைப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த திரைப்படத்துக்கான புரோமோசன் வேலைகளில் ராணாவும் சாய் பல்லவியும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்படம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் நடிகை சாய் பல்லவி பங்கேற்று இருக்கிறார்.
நபிகள் நாயகம் மீது அவதூறு: நுபுர் சர்மா தலையை வெட்ட உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது
சாய் பல்லவி பேச்சு
இந்த நேர்காணலில் பேசிய சாய் பல்லவி, "காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
காஷ்மீர் பைல்ஸ்
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மார்ச் மாதம் நாடு முழுவதும் வெளியானது. விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் அந்த படம்தான் தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியது.
பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற படம்
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.
சலுகை கொடுத்த பாஜக மாநில அரசுகள்
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் வெளியிட்ட பதிவில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது. அதே போல் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். தமிழ்நாட்டின் முற்போக்கு அமைப்புகள் இதற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.