போர்க்களமான அக்னிபாத் போராட்டம்.. தெலுங்கானாவில் போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி.. பலர் படுகாயம்
ஹைதராபாத்: அக்னிபாத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு முப்படைகளுக்கு புதிய ஆட்சேர்பு கொள்கையை அறிவித்தது. அக்னிபாத் என்ற இத்திட்டத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். இவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியலாம்!

அக்னிபாத் திட்டம்
நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு, 80% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். 20% பேர் மட்டும் ராணுவப் பணியைத் தொடர முடியும். பணி முடியும் போது இவர்களுக்கு ஒருமுறை மட்டும் கொடுக்கப்படும் தொகுப்பு தொகை வழங்கப்படும். இந்த புதிய திட்டம் குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாகச் சாடியுள்ளன.

தெலங்கானா
வட மாநிலங்கள் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பீகார், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். குறிப்பாகப் பீகாரில் ரயில்களும் தீ வைக்கப்பட்டன. இந்தச் சூழலில் இப்போது இந்தப் போராட்டம் மெல்லத் தென் மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. தெலங்கானாவில் பல இடங்களில் போராட்டம் தொடங்கி உள்ளது.

செகந்திராபாத்
இன்று காலை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அமைதியாகத் தொடங்கிய போராட்டம் ஒரு கட்டத்தில் கையை மீறிச் சென்றது. அங்கு இருந்த நான்கு ரயில் பெட்டிகளுக்கு அவர்கள் தீ வைத்தனர். மேலும், சரக்கு ரயில்களையும் மறித்தனர். ரயில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியும் உறுதி செய்தார்.

தீ வைப்பு
போராட்டக்காரர்கள் செகந்திராபாத் ரயில் நிலைய அலுவலகங்களையும் சேதப்படுத்தினர். அங்கிருந்த கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களைச் சூறையாடினர். பிளாட்பாரத்தில் இருந்த ஸ்டால்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் இன்ஜின்களில் நுழைய முயன்றதால், ரயில்வே அதிகாரிகள் ரயில் நிலையம் முழுவதும் மின்சாரத்தைத் துண்டித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அஜந்தா எக்ஸ்பிரஸ், ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் எம்எம்டிஎஸ் ரயிலுக்கு தீ வைத்தனர் சேதப்படுத்தினர்

ஒருவர் பலி
நிலைமையைக் கட்டுப்படுத்த அங்குக் கூடியிருந்த மக்களை நோக்கி தெலுங்கானா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போராட்டக்காரர்களை நோக்கி சுமார் 10 ரவுண்ட்கள் சுட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தாக இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

சேதம்
இதில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுச் சொத்துகள் சேதம் அடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு கருதி செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய ரயில்கள் அருகிலுள்ள மற்ற நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. செகந்திராபாத் ஸ்டேஷனில் இருந்து புறப்பட வேண்டிய மற்ற அனைத்து ரயில்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. ரயிலுக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் போராட்டத்தால் செய்வது அறியாமல் குழம்பிய நிலையில், அவர்களை போலீசார் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications