நடிகர் அல்லு அர்ஜுன் விடுதலை! ஜாமீன் கிடைத்ததையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார்
ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தை திரையரங்கில் பார்க்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சஞ்சல்குடா சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
அல்லு அர்ஜுன் திரைப்படத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதுவும் புஷ்பா திரைப்படம் எனில் சொல்லவே வேண்டியதில்லை. இந்நிலையில் டிச.5ம் தேதி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் தியேட்டரில் வெளியானது. ஆனால், டிச.4ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்களில் இப்படத்தின் சிறப்பு காட்சி வெளியாகியிருந்தது. இதனை காண நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். சிறப்பு காட்சி திரையிடும் தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பு இன்றி வருகை தந்திருந்தார்.

இதனால் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. எப்படியாவது அல்லு அர்ஜுனை பார்த்துவிட மாட்டோமா? என்று ரசிகர்கள் முந்தியடிக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள், ரசிகர்களை தள்ளிவிட்டனர். இதில் ரசிகர்கள் சரிந்ததில், அவர்கள் மீது இரும்பு கேட் ஒன்று விழுந்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டதை கலைத்தனர். பதட்டத்தில் ரசிகர்கள் தெறித்து ஓட நெரிசலில் பலர் சிக்கிக்கொண்டனர்.
நெரிசலில் சிக்கிய 35 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தது, ரசிகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஏற்பாடுகளை தியேட்டர் நிர்வாகம் செய்யாதது போன்றவைதான் விபத்துக்கு காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து தியேட்டர் நிர்வாகதினர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் தியேட்டர் மேனஜர், ஊழியர் மற்றும் உரிமையாளர் என மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்ற போலீசார், விசாரணைக்காக அவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவர் கைது செய்யப்படுவதாக அறிவித்தனர். இந்த கைது நடவடிக்கை நாடு முழுவதும் பேசுபொருளானது. அவரை 15 நாட்கள் சிறை காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
மறுபுறம் தனக்கு ஜாமீன் கோரி ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணை நடைபெற்று ஜாமீன் நேற்றிரவே வழங்கப்பட்டது. அவர் சிறையிலிருந்த விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய ஆவணங்கள் நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப்பெறவில்லை என்று கூறிய சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுத்துவிட்டது. இதனையடுத்து இன்று காலை அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications