உக்ரைன் லுபோவ் Weds ஹைதராபாத் பிரதீக்.. தேசம் கடந்த நேசம்!
ஐதராபாத்: உக்ரைன் பெண்ணை ஐதராபாத்தை சேர்ந்த நபர் காதலித்து திருமணம் செய்துள்ளார். போருக்கு மத்தியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
உக்ரைனை ரஷ்யாவின் ஏவுகணைகள் தாக்கி வருகின்றன. பொதுமக்கள் உயிர் பயத்தில் சுரங்கங்களில் பதுங்கி உள்ளனர். மேலும் கூட்டம் கூட்டமாக ஏராளமானவர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் உக்ரைனை சேர்ந்த பெண்ணை ஐதராபாத்தை சேர்ந்தவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதன் விபரம் வருமாறு:

காதல்
ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரதீக். இவர் உக்ரைனில் பணியாற்றி வருகிறார். உக்ரைனை சேர்ந்தவர் லுபோவ். இவர்கள் 2 பேரும் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே இருவரின் இதயங்களும் இடம்மாறி கொண்டன. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் உருகி உருகி காதலிக்க தொடங்கினர்.

திருமணம்
இதற்கிடையே, ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதற்றம் அதிகரித்தது. போர் மேகங்கள் உருவாக துவங்கியது. இதையடுத்து இருவரும் பிப்ரவரி 23ல் இருவரும் உக்ரைனில் திருமணம் செய்து கொண்டனர். உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ல் போர் துவங்கிய நிலையில் பிரதீக், லுபோவ் தம்பதி வரவேற்பு நிகழ்ச்சிக்காக முந்தைய நாளே இந்தியா புறப்பட்டு வந்தனர்.

வரவேற்பு
இந்த புதுமண தம்பதியின் வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 27ல் ஐதராபாத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியை ஐதராபாத் புறநகரில் உள்ள சில்கூர் பாலாஜி கோவிலின் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் நடத்தி வைத்தார்.

விபரங்களை கூற முடியாது
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‛‛உக்ரைனில் போர் நடப்பதால் இவர்களின் திருமணம் விமரிசையாக நடத்தப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக இருவரும் போருக்கு முன்பே நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் தங்களின் விபரங்களை வெளியிட விரும்பவில்லை. இதனால் இருவரின் விவரங்களை முழுவதுமாக என்னால் கூற முடியாது'' என்றார். மேலும் அவர் கூறுகையில், ‛‛ரஷ்யாவின் போரால் உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் போர் முடிவுக்கு வர வேண்டும் என கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications