“ஆபரேசன் சவுத்”.. இன்று ஹைதராபாத்தில் அமித்ஷா ஆலோசனை! ஒரே கல்லில் 2 மாங்காய் - மலருமா தாமரை?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் விடுதலை தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக அம்மாநிலத்திற்கு செல்லும் மத்திய உள்துறை அமைச்ச்சர் அமித்ஷா, இன்று தெலுங்கானா மாநில பாஜக மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

செப்டம்பர் 17 ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் சார்பில் 2 வது ஆண்டாக விடுதலை தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ள உள்ளார்.
மத்திய துணை ராணுவப் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதை தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்ற இருக்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தெலுங்கானா மாநிலமும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில், இதில் எப்படியாவது வெற்றிபெற்று தாமரையை தென் இந்தியாவில் மலர செய்ய வேண்டும் என்பது பாஜக தலைமையின் நோக்கமாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா, ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை அறிவித்தார். பாஜகவால் இதுவரை வெற்றிபெற முடியாத தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே அது. ஆனால், ஆட்சியில் இருந்த கர்நாடகாவையே நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸில் பாஜக இழந்துவிட்டது.
இந்த நிலையில்தான் தற்போது தெலுங்கானாவை பாஜக குறி வைத்து இருக்கிறது. பாஜக மாநில தலைவரும், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவிக்கையில், "போலாராமில் உள்ள ராஷ்டிரபதி நிலையத்தில் நடைபெற உள்ள ஹைதராபாத் விடுதலை நாள் நிகழ்வில் செப்டம்பர் 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளார்.
ஹைதராபாத் விடுதலை நாளுக்கும் ராஷ்டிரபதி நிலையத்துக்கும் தொடர்பு உள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி விடுதலை கிடைத்தவுடன் ராஷ்டிரபதி நிலையத்தில்தான் முதன்முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது." என்றார்.












Click it and Unblock the Notifications