ஷெர்வானிக்குள் ஆர்எஸ்எஸ் உள்ளாடை.. சாடிய தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்! வரலாறையே சொல்லிட்டாரே ஒவைசி
ஐதராபாத்: தன்னுடைய ஷெர்வானிக்குள் ஆர்.எஸ்.எஸ்-இன் காக்கி உள்ளாடையை அணிந்துள்ளார் என்று விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர்தான் என அசதுத்தீன் ஒவைசி விமர்சித்து உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து இருக்கிறது. ஆளும் பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சிகள் இடையே அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இது அல்லாமல் அசதுத்தீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சியும் 5 க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஒவைசி பாஜகவின் பி டீம் என்ற விமர்சனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் மீது சுமத்தப்பட்டு வருகின்றன.

இதே குற்றச்சாட்டை தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் வேறு வகையில் ஒவைசி மீது சுமத்தி இருந்தார். ஒவைசியை "ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவை" என்று விமர்சித்த ரேவந்த் ரெட்டி, சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு "நாய் விசில் அரசியல்" செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஒவைசியைக் கடுமையாக தாக்கிப் பேசிய ரேவந்த் ரெட்டி, "ஒவைசி தனது ஷெர்வானிக்குள் காக்கி காலாடை அணிந்திருக்கிறார்" என்று விமர்சித்தார்.
இது குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசதுத்தீன், "உங்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றால், எங்களின் ஆடைகளைப் பற்றிப் பேசத் தொடங்குகிறீர்கள். இதன் பெயர்தான் நாய் விசில் அரசியல் என்று அழைக்கப்படுகிறது, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரால் இந்த அரசியல் செய்யப்படுகிறது. நான் ஏற்கனவே ரேவந்த் ரெட்டயிடம் சொல்லி உள்ளேன். நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர். உங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் இன்னும் தொடர்பு உள்ளது, உங்களை மோகன் பகவத் கட்டுப்படுத்துகிறார்.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் சாடியில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்து, அதன்பின்னர் அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு சென்று, பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து, இப்போது காங்கிரஸில் இணைந்துள்ளார். 'காங்கிரஸின் காந்தி பவன் மோகன் பகவத்தால் கைப்பற்றப்பட்டு, அவர் விரும்பியபடி காங்கிரஸ் கட்சியை வழி நடத்துவார் என்று யாரோ சொன்னார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு போராட்டங்களின்போது பிரதமர் நரேந்திர மோடி, ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்கள் அணிந்திருக்கும் உடையில் அடையாளம் காண முடியும் என்று கூறினார். எனது ஷெர்வானி பற்றி ரேவந்த் பேசியபோது மோடி பேசிய அதே விஷயத்தை செய்து உள்ளார்." என்றார்.












Click it and Unblock the Notifications