டிஆர்எஸ் டூ பிஆர்எஸ்! பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டா மாதிரி இருக்கு.. தெலுங்கானா முதல்வரை கலாய்த்த பாஜக
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் தேசிய அளவில் பாரத் ராஷ்ட்ர சமிதி என்ற கட்சியை தொடங்கியுள்ளது பன்றியின் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டது போல் இருப்பதாக பாஜக மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் முடிவு செய்து அது தொடர்பாக அறிவித்தும் அழைத்தும் வந்தனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவே அந்த கூட்டணியிலிருந்து விலகியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து மம்தா பானர்ஜி பல தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும் கே சந்திரசேகர ராவ் பிடி கொடுக்கவில்லை.
விரைவில் தேசிய கட்சி.. பணிகள் நடைபெற்று வருகிறது.. பிரதமர் வேட்பாளர்களில் முந்தும் சந்திரசேகர ராவ்
தேசிய அளவிலான கட்சி
இந்த நிலையில்தான் அவர் தேசிய அளவிலான ஒரு கட்சியை நேற்று தொடங்கினார். விஜயதசமி நன்னாளில் தொடங்கப்பட்ட அந்த கட்சிக்கு பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியின் பெயரில் தெலுங்கானாவுக்கு பதிலாக பாரத் என்பதை மாற்றியுள்ளார்.
கேசிஆரின் முன்னெடுப்பு
இந்த நிலையில் கேசிஆரின் முன்னெடுப்பை எதிர்க்கட்சியினர் பாராட்டி வருகிறார்கள். ஆனால் பாஜகவோ கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் தனது ட்விட்டரில், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி பாரத் ராஷ்ட்ர சமிதியாக மாறியுள்ளது.
லிப்ஸ்டிக்
இதை பார்க்கும் போது பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டது போல் உள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் செயல்தலைவரும் கேசிஆரின் மகனுமான கே.டி. ராமா ராவ் கேம் சேஞ்சர் என தன்னை அறிவித்து கொண்டார். ஆனால் அவரது தந்தை கேசிஆரோ நேம் சேஞ்சராகிவிட்டார் (டிஆர்எஸ் டூ பிஆர்எஸ் என்பதைத்தான் பண்டி சொல்கிறார்). விரைவில் மக்கள் உங்கள் தலையெழுத்தை மாற்றுவார்கள் என பண்டி விமர்சித்துள்ளார்.
டிஆர்எஸ் டூ பிஆர்எஸ்
தெலுங்கானா முதல்வரின் தேசிய கட்சி குறித்து மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கே கிருஷ்ண சாகர் ராவ் கூறுகையில் டிஆர்எஸ் கட்சியிலிருந்து பிஆர்எஸ் என பெயர் மாற்றுவதன் மூலம் ஒரு கட்சி எப்படி தேசிய கட்சியாக மாறும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஒரு கட்சிக்கு பெருவாரியான வாக்கு வங்கி இருந்தால்தானே அது தேசியக் கட்சி என கேள்வி எழுப்பியுள்ளார்.