மாந்திரீக ஏவல்.. சூனியம் வைத்த பெண்ணை உயிருடன் எரித்த உறவினர்கள்! தெலுங்கானாவில் ஷாக்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சூனியம் வைத்த பெண்ணை, உறவினர்கள் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட மாந்திரீக விஷயங்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன. மற்ற தென் மாநிலங்களிலும் இந்த விஷயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், மக்கள் இதை நம்பி பெரிய அளவில் ஏமாறுவதில்லை. ஆனால், தெலங்கானாவில் அப்படியல்ல. பில்லி சூனியம் உண்மை என்று நம்பி சிலர் பணத்தை இழக்கின்றனர். இன்னும் சிலர், இந்த செயலை செய்தவர்களை கண்டுபிடித்து கொலை செய்து வருகின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு, தெலங்கானாவில் ஒரு தந்தையும் அவரது இரண்டு மகள்களும் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி. அதாவது, கொல்லப்பட்ட தந்தை, யாருக்கோ சூனியம் வைத்திருக்கிறாராம். யார் சூனியம் வைத்தது என்பதை தெரிந்துக்கொண்ட நபர், ஆட்களை ஏவி மொத்த குடும்பத்தையும் குளோஸ் செய்திருக்கிறார்.
பில்லி சூனியம் என எதுவும் கிடையாது. எல்லாம் ஏமாற்று வேலை என்று காவல்துறை கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இதுபோன்ற குற்றங்கள் குறையவில்லை. இந்நிலையில் நேற்று இதேபோன்ற குற்றம் ஒன்ற நடந்திருக்கிறது.
அதாவது, மேடக் மாவட்டம் கத்ரியால் கிராமத்தில் முத்தவா எனும் பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். நடுத்தர வயதான இவர், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட மாந்திரீக வேலைகளை செய்து வருகிறார். எனவே, இவரை பார்க்க வேண்டும் என பல்வேறு ஊர்களிலிருந்து ஆட்கள் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்கள். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதெல்லாம் சரியில்லை, வேண்டாத வேலை என்று எச்சரித்துள்ளனர். ஆனால் முத்தவா அவர்கள் சொன்னதை கேட்கவில்லை.
இப்படி இருக்கையில் நேற்று இரவு முத்தவா வீட்டிற்கு வந்த சில மர்ம நபர்கள், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். வலியில் அலறி துடித்த முத்தவாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் முத்தவாவின் உறவினர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களை விசாரித்ததில், முத்தவா சூனியம் வைத்ததால் தங்கள் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் எனவேதான் முத்தவாவை கொன்றதாகவும் கூறியுள்ளனர். உடல் நலம் சரியில்லை எனில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய பரிசோதனைகள் செய்து அதற்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு, சூனியம் வைத்திருப்பதாக நம்பி, முத்தாவை கொன்றதற்கு காரணம் மூடநம்பிக்கைதான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications