மொத்தமாக காலியாகும் கேசிஆர் கட்சி.. அப்படியே காங்கிரஸில் ஐக்கியம்.. இது என்ன புது ட்விஸ்ட்.. பகீர்!
ஹைதராபாத்: கடந்த 2014 முதல் 9 ஆண்டுகள் தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் காங்கிரஸில் ஐக்கியமாகி வருகிறார்கள். இதற்கிடையே கேசிஆரின் இந்த பிஆர்எஸ் கட்சி இன்னும் சில வாரங்களில் முழுமையாகக் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகும் என்று காங்கிரஸின் தனம் நாகேந்தர் தெரிவித்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தெலுங்கானாவில் கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 9 ஆண்டுகளாகத் தெலுங்கானாவை ஆண்ட கேசிஆர் கட்சிக்கு வெறும் 39 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

ஆனால், அதன் பிறகு பல்வேறு பிஆர்எஸ் தலைவர்களும் வரிசையாக அங்கிருந்து விலகி இப்போது காங்கிரஸில் ஐக்கியமாகி வருகிறார்கள். இது தெலுங்கானாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிஆர்எஸ் காலி: இதற்கிடையே தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தனம் நாகேந்தர் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது மிக விரைவிலேயே கேசிஆரின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி மொத்தமாகக் காங்கிரஸில் ஐக்கியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கேசிஆர் கட்சியில் உள்ள பல முக்கிய தலைவர்கள் ஏற்கனவே அங்கிருந்து விலகத் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ராஜேந்திர நகர் எம்எல்ஏவாக இருந்த பிரகாஷ் கவுட் பிஆர்எஸ் கட்சியில் ஐக்கியமானார். கடந்த டிசம்பரில் தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடந்த நிலையில், இதுவரை 8 எம்எல்ஏக்கள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமாகி உள்ளனர். அதேபோல எம்எல்சி எனப்படும் சட்ட மேலவை உறுப்பினர்கள் பலரும் கூட காங்கிரஸில் இணைந்து வருகிறார்கள். கடந்த 7 மாதங்களில் இதுபோல ஆறு எம்எல்சிகள் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டே வாரம்: அதேநேரம் இது இத்துடன் நிற்காதாம். மேலும், பல பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணையலாம் என்றும் தனம் நாகேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள்.. அடுத்த சில நாட்களில் சுமார் ஆறு எம்எல்ஏக்கள் பிஆர்எஸ் கட்சியில் ஐக்கியமாவார்கள். அடுத்த இரண்டு வாரத்தில் ஒட்டுமொத்த பிஆர்எஸ் கட்சியும் காங்கிரஸில் ஐக்கியமாகும். அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு எம்.எல்.ஏக்கள் மட்டுமே கே.சி.ஆருடன் இருப்பார்கள்" என்றார்.
இந்த தனம் நாகேந்தர் லோக்சபா தேர்தலுக்கு முன்பே பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 முதல் 2014 வரை ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த நாகேந்தர், கடந்த 2018இல் கேசிஆர் கட்சியில் இணைந்து ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
ஐக்கியம்: தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி மெல்லக் காணாமல் போய் வருகிறது.. எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பிஆர்எஸ் ராஜ்யசபா உறுப்பினர் கே கேசவ் ராவ், அவரது மகளும் ஹைதராபாத் மேயருமான விஜய லக்ஷ்மி ஆர் கட்வால் உள்ளிட்ட பல தலைவர்கள் கேசிஆர் கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி வருகிறார்கள்.
இது தெலுங்கானா அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், பிஆர்எஸ் செயல் தலைவர் கே டி ராமராவ், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கிறோம் என ராகுல் காந்தி சொல்கிறார்.. இதுதான் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் வழியா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமராவ்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பிஆர்எஸ் கட்சியில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய் இருப்போரை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், பலரும் பதவியில் இருக்கும் போது கட்சி தாவி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றனர். இது சரிதானா.. ராகுல் காந்தி இப்படி தான் அரசியலமைப்பைக் காப்பாற்றப் போகிறாரா?" என்று அவர் கடுமையாகச் சாடினார். அடுத்தடுத்து பிஆர்எஸ் தலைவர்கள் காங்கிரஸில் ஐக்கியமாகி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.











Click it and Unblock the Notifications